Skip to main content

"தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது" -பிபின் ராவத் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி இரங்கல்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

bipin rawat

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதனைத்தொடர்ந்து இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தின் மறைவுக்கு அரசியல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜெனரல் பிபின் ராவத்தின் அகால மரணம் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நான்கு தசாப்தகால தன்னலமற்ற சேவை தனித்துவமான துணிச்சல் மற்றும் வீரத்தால் குறிக்கப்படும்.. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.ஹெலிகாப்டர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் கடமையைச் செய்யும்போது உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் சக குடிமக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

 

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, "தமிழகத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை நாம் இழந்ததில் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் இந்தியாவிற்கு சேவை செய்தனர். எனது எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன.

 

ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகளையும் பாதுகாப்பு தளவாடங்களையும் நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். மூலோபாய விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகள் தனித்துவமானவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி.

 

இந்தியாவின் முதல் முப்படைத்தளபதியாக, பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட நமது ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் ஜெனரல் ராவத் பணியாற்றினார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை முப்படை தளபதி பொறுப்பிற்கு தன்னுடன் கொண்டு வந்தார். அவரது சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது" என கூறியுள்ளார்.

 

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஜியை மிகவும் துயரமான விபத்தில் இழந்துள்ளோம். இது தேசத்திற்கு மிகவும் சோகமான நாள். தாய்நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய துணிச்சலான வீரர்களில் இவரும் ஒருவர். அவரது முன்மாதிரியான பங்களிப்புகளும் அர்ப்பணிப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்,

 

திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 இராணுவ அதிகாரிகளின் சோகமான மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்