Skip to main content

சமூகவலைதளத்தை தடை செய்ய  திட்டம் உள்ளதா? - மத்திய அரசு பதில்!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

parliament

 

மத்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் சமூகவலைதளங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. இந்தக் கட்டுப்பாடுகளால் ட்விட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. இதற்கிடையே அண்மையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு தடை விதிக்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எந்த சமூக ஊடகத்தையாவது தடை செய்யும் திட்டம் இருக்கிறதா என கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர், தற்போதைக்கு அவ்வாறான திட்டம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “எந்தவொரு சமூக ஊடகத்தையும் தடை செய்யும் திட்டம், தற்போது மத்திய அரசிடம் இல்லை. சமூக ஊடகங்களில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலான பதிவுகள் வெளிவருவது குறித்து பயனர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் அரசுக்கு வருகிறது. அந்தப் புகார்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அவா்களின் குறைகளைத் தீா்ப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக, சமூக ஊடகங்களின் பொறுப்பு அலுவலா்களுடன் மத்திய அரசு தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.

 

இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பில் தனது அடித்தளத்தைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு ரீதியிலான அடிப்படை உரிமைகளை உறுதி செய்துள்ளது. எந்தவொரு சமூக ஊடகமோ அல்லது வேறு தளமோ நமது ஜனநாயகத்தை அழித்துவிட முடியாது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்காகவும், இந்தியாவின் பாதுகாப்பிற்காகவும், பொது ஒழுங்கையும் வெளிநாடுகளுடனான நட்புறவையும் பாதுகாக்கும் வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையிலான ஆன்லைன் பதிவுகளை மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69ஏ-இன் அடிப்படையில் முடக்கிவருகிறது.”

 

இவ்வாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.