Skip to main content

"கடந்த 70 வருடங்களை விட அடுத்த 12 வருடங்களில் அதிக மருத்துவர்களை நாடு பெறப்போகிறது" - பிரதமர் மோடி!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

narendra modi

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (25.10.2021) உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 மருத்துவ கல்லூரிகளைத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,

 

முதல்வராக இல்லாதபோதும், உத்தரப்பிரதேசத்தின் மோசமான மருத்துவ கட்டமைப்பு குறித்து யோகி பாராளுமன்றத்தில் எடுத்துரைத்ததை உத்தரப்பிரதேச மக்களால் மறக்க முடியாது. ஒரே நேரத்தில் 9 கல்லூரிகளின் திறப்பு விழா இதற்கு முன் நடந்ததுண்டா? முந்தைய அரசுகள் தங்கள் குடும்பத்தின் லாக்கர்களை நிரப்பி தங்களுக்கென்று மட்டுமே சம்பாதித்துக்கொண்டிருந்தன. ஆனால் ஏழைகளின் பணத்தை சேமித்து அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.

 

கரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், 100 கோடி தடுப்பூசி மருந்துகளை செலுத்தி, நாடு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக, சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தவர்கள், சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, அதனை வசதி இல்லாமல் வைத்திருந்தனர்.

 

உத்தரப்பிரதேசத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் வேகம், மருத்துவ படிப்பிற்கான இடங்களிலும், மருத்துவர்களின் எண்ணிக்கையிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இருப்பதால், இப்போது ஏழை பெற்றோரின் குழந்தைகளும் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என கனவு காணவும், அதை நிறைவேற்றவும் முடியும். அடுத்த 10 - 12 ஆண்டுகளில், நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான மருத்துவர்களைப் நாடு பெறப் போகிறது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.