Skip to main content

எம்.எல்.ஏ. நாக்கை அறுப்பவருக்கு ரூ. 10 லட்சம் பரிசு; காங்கிரஸ் நிர்வாகியால் அதிர்ச்சி அறிவிப்பு!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

MLA Tongue Cutter Rs. 10 lakh as a prize, Congress executive said

 

இந்து மதத்தையும், புனித நூலையும் அவமதித்த சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாக்கை அறுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தில்  காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் துறையின் மாவட்டத் தலைவர் பண்டிட் கங்கா ராம் சர்மா,  சமாஜ்வாதி கட்சித் தலைவர் இந்து மதத்தை அவமதித்து வருவதாகவும், இந்து மத புத்தகமான ராம்சரித்மனாஸை அவதூறாக பேசியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

 

சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுவாமி பிரசாத் மெளரியா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் ஒரு  பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் “ பிராமணியத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிராமணியம் தான் காரணம். இந்து என்பது ஒரு மதமே இல்லை. இந்து மதம் என்பது வெறும் புரளி தான். இந்த நாட்டில் உள்ள தலித்கள், பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை சிக்க வைக்கும் சதி தான் பிராமணியம். அந்த பிராமண மதத்தை இந்து மதம் என்று முத்திரை குத்தி வைத்துள்ளது. இந்து மதம் இருந்திருந்தால் பழங்குடியினர் மதிக்கப்பட்டிருப்பார்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மதிக்கப்பட்டியிருப்பார்கள். ஆனால், என்ன ஒரு கேலிக்கூத்து” என்று எழுதி ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

 

இந்த நிலையில்  மொராதாபாத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் துறையின் மாவட்டத் தலைவராக பண்டிட் கங்கா ராம் சர்மா, சுவாமி பிரசாத் மெளரியா கூறிய கருத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,   “ சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினரான சுவாமி பிரசாத் மெளரியா இந்து மத புத்தகமான ராம்சரித்மானஸை மட்டுமல்ல, இந்து மதத்தையும் அவமதித்து வருகிறார். அவருடைய நாக்கை அறுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.