
திருமணம் செய்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து கோவா புறப்பட்டு சென்ற போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், வடக்கு பெங்களூருவைச் சேர்ந்தவர் சஞ்சய் கெவின் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரோஷ்னி மோசஸ் (22). இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து கோவா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சஞ்சய், ரோஷ்னியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவரது உடலை தெற்கு கோவாவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் தூக்கி வீசி அங்கிருந்து தப்பித்து பெங்களூருவுக்கு வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு, அழுகிய நிலையில் ரோஷ்னியின் உடலை கண்ட பொதுமக்கள், உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரோஷ்னியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பெங்களூருவுக்கு தப்பிச் சென்ற சஞ்சய்யை 24 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.