Skip to main content

முதுகில் குத்தாதீர்கள்...நெஞ்சில் சுடுங்கள்!- தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆவேசம்!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ, 35A ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் காஷ்மீர் மாநில பிரிப்பு மசோதா, காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மக்களவையில் காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஆனால் மசோதா மீதான விவாதம் இன்று நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.

 

kashmir nationalist party leader farooq abdullah called press meet union government decision jammu against

 

அதன் தொடர்ச்சியாக இன்று காலை கூடிய மக்களவை கூட்டத்தில் காஷ்மீர் மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சிகள், ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், எந்த ஒரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவதாக இருந்தாலும், முதலில் நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில், குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாக்கிய பின் நாடாளுமன்றத்தில் மசோதவை தாக்கல் செய்தது என்று மத்திய அரசை குற்றம் சாட்டினார்.

 

kashmir nationalist party leader farooq abdullah called press meet union government decision jammu against

 

அதனை தொடர்ந்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சுப்ரியா சுலே, தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா வீட்டு சிறையில் உள்ளாரா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பரூக் அப்துல்லா எம்.பி கைது செய்யப்படவோ, தடுப்புக்காவலில் வைக்கப்படவோ இல்லை. தனது இல்லத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் இருக்கிறார் என்றார். இந்த நிலையில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, நான் வீட்டுக் காவலில் கைது செய்யப்படவில்லை, எனது சொந்த விருப்பப்படி என் வீட்டிற்குள் தங்கியிருக்கிறேன் என்று உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் பொய் சொல்கிறது என்றும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

 

kashmir nationalist party leader farooq abdullah called press meet union government decision jammu against

 

 

முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று ஆவேசமாக தெரிவித்தார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று இரவு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செய்து செய்யப்பட்டனர். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடியும் நிலையில், இன்று மாலை காஷ்மீர் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் மக்களவையில் நிறைவேற உள்ளது. ஏற்கனவே மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியுள்ளதால், மக்களவையில் எளிதாக நிறைவேற்றி காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம். 






 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.