![Jail for Narmada Bachao Andolan activist Medha Patkar](http://image.nakkheeran.in/cdn/farfuture/iv9DdkdkVj2HtrpkXpJV0R3vkmpQFSBU6AfSsr179lE/1719834975/sites/default/files/inline-images/metha-batkar-art.jpg)
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தவரும், தற்போதைய டெல்லியின் துணைநிலை ஆளுநராக உள்ள வினய் குமார் சக்சேனா சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேதா பட்கருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வி கே சக்சேனாவுக்கு 10 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து வி.கே.சக்சேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு இழப்பீடு எதுவும் தேவையில்லை. அந்த நிதியை டெல்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் (டி.எல்.எஸ்.ஏ.) கொடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதே சமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மேதா பட்கருக்கு அனுமதி அளிக்கும் வகையில் டெல்லி சாகேத் நீதிமன்றம் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கர் கருத்து தெரிவிக்கையில், “உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. யாரையும் அவதூறு செய்ய முயற்சிக்கவில்லை. எங்கள் வேலையை மட்டுமே செய்வோம். நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சவால் செய்வோம்”எனத் தெரிவித்துள்ளார்.