Skip to main content

தொடர் மிரட்டல்கள், உயரதிகாரிகளின் ஆதரவின்மை... சுனிதா யாதவ் எடுத்த முடிவு...

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

gujarat cop sunita yadav resigned

 

குஜராத்தில் அமைச்சரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து பிரபலமான சுனிதா யாதவ் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. இவர் கடந்த புதன்கிழமை இரவு ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை மடக்கிய அப்பகுதி பெண் காவலர் சுனிதா யாதவ் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரின் கேள்விகளுக்கு அமைச்சரின் மகன் திமிராகப் பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, "என்னை இங்கிருந்து செல்ல அனுமதிக்காவிட்டால் 365 நாளும் உன்னை இங்கேயே நிற்கவைத்துவிடுவேன். அதற்கு அதிகாரம் இருக்கிறது” என சுனிதாவை மிரட்டியுள்ளார் பிரகாஷ் கனானி.

 

இதனையடுத்து, கடமையைச் செய்ய இடையூறாக இருந்ததாகவும், மிரட்டல் விடுத்த வகையில் பேசியதாகவும் அமைச்சரின் மகனைக் கைது செய்தார் சுனிதா யாதவ். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலனா நிலையில், பல்வேறு தரப்பினரும் சுனிதாவின் தைரியத்தைப் பாராட்டி வந்தனர். ஆனால், சுனிதாவை வேறு காவல்நிலையத்திற்குப் பணியிடமாற்றம் செய்தது அம்மாநில காவல்துறை. இந்நிலையில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுனிதா. இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் விதிமுறைகளை மீறியதால் கைதுசெய்தேன். ஆனால் எனது உயர் அதிகாரிகள் எனக்கு முறையாக ஆதரவு அளிக்கவில்லை.

 

ஏராளமான மிரட்டல்கள், அவதூறு பேச்சுகளைக் கேட்கவேண்டியுள்ளது. ஒரு காவலராக எனது கடமையைச் செய்ததற்கு இதுதான் பரிசு. இது நமது அரசு முறையில் உள்ள தவறு, இந்த அமைச்சர் மகன் போன்றவர்கள் தங்களை வி.வி.ஐ.பி. மகன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் ஐ.பி.எஸ். தேர்வுகளை எதிர்கொண்டு காவல்துறைக்கு அதிகாரியாகத் திரும்புவேன் என்றும், அதில் தோல்வியடைந்தால், வழக்கறிஞராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ சமூகப் பணி செய்வேன் எனவும் மற்றொரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்துள்ளதாக சுனிதா கூறும் நிலையில், அமைச்சர் மகன் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் ராஜினாமாவை ஏற்கமுடியாது என சூரத் காவல்துறை ஆணையர் ஆர்.பி. பிரம்மாபாட் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.