
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து சுமார் 250 ஹஜ் பயணிகளுடன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று உத்தரப் பிரேதசத்திற்கு வந்தது. அந்த விமானம், லக்னோ விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென்ற தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சக்கத்தில் இருந்து திடீரென்று தீப்பொறி பறந்து புகை வந்துள்ளது. இதனால், விமானத்தில் இருந்து ஹஜ் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். தீப்பொறி பறந்ததை அடுத்து விமானி உடனடியாக பாதுகாப்பாக விமானத்தை நிறுத்தினார்.
அதனை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 20 நிமிடங்களில் நிலைமை சீராகி விமானத்தில் இருந்த 250 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமானி சாமர்த்தியத்தால், விமானத்தில் இருந்த 250 பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் இருக்கும் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் தீப்பொறி கிளம்பி புகை வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அண்மையில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிரவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.