Skip to main content

"கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி"!- தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பேட்டி... 

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

covishield, covaxin vaccine approved by india government


கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (Drugs Controller General of India) அதிகாரி சோமணி தெரிவித்துள்ளார். 

 

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரியும், மருத்துவருமான சோமணி, "கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்தது. கோவிஷீல்டு பரிசோதனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தோம். அவசர கால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்ஸியசில் பராமரிக்கலாம். கெடிலா ஹெல்த் கேர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மூன்றாவது கட்ட சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் 100% பாதுகாப்பானது என்பதாலேயே அனுமதி அளிக்கப்பட்டது. தடுப்பூசி போட்டபின் காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படுவது இயல்புதான்" என்றார்.

 

கோவாக்சின் தடுப்பூசியை ஐ.சி.எம்.ஆர். மற்றும் புனேவில் உள்ள ஆய்வகத்துடன் இணைந்து 'பாரத் பயோடெக் நிறுவனம்' தயாரிக்கிறது. அதேபோல் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு பிரிட்டனைத் தொடர்ந்து இரண்டாவது நாடாக இந்தியா அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நிறைவடைந்த நிலையில், இரு கரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.