Skip to main content

“புக் மை சி.எம்; 30% கமிஷன் கிடைக்கும்” - வைரலாகும் பாலிடிக்ஸ் போஸ்டர்ஸ்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

“Book My CM; Get 30% Commission” Viral Politics Posters

 

காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டத்திற்கு முன்னதாக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையே போஸ்டர் போர் வெடித்துள்ளது. 

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கே.சி. வேணுகோபால், டி.ஆர். பாலு உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

 

தெலங்கானாவில் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காரிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து, நகரம் முழுவதும் காங்கிரஸை குறிவைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்த சுவரொட்டியில், ‘ஊழல் செயற்குழு’ என்றும், ‘ஊழல் மோசடி செய்பவர்களிடம் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்றும் ஒட்டப்பட்டிருந்தது. இது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹைதராபாத் முழுவதும் சுவரொட்டி போர் தொடங்கியுள்ளது. தெலுங்கானா முதல்வரும், பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவுக்கு எதிராக ஹைதராபாத்தில் உள்ள பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘Book my cm ஒப்பந்தங்கள் 30% கமிஷன் கிடைக்கும்’ என்று எழுதி சந்திரசேகர ராவின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்