
மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரும் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர்.
மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார். அதே சமயம், அஜித் பவாரும், சரத் பவாரும் மீண்டும் ஒரே அணியில் இணையவிருக்கின்றனர் என்று அவ்வப்போது செய்திகள் வெளியானது. இந்த ஊகங்களுக்கு இடமளிக்கும் வகையில், மீண்டும் அஜித் பவாருடன் இணைவது குறித்து சரத் பவார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியானது.

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பா.ஜ.க கூட்டணியை நியாயப்படுத்தி அஜித் பவார் பேசியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 26வது நிறுவன தினம் புனேவில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய அஜித் பவார், “சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா பூலே, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் ராஜர்ஷி ஷாஹு மகாராஜ் ஆகியோரின் சித்தாந்தங்களின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் நிறுவப்பட்டது. பாஜக மற்றும் மகாயுதி கூட்டணியுடன் கைகோர்க்கும் நமது முடிவை சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 2019ல் சிவசேனாவுடன் நாம் கூட்டணி சேரவில்லையா? அப்போதும் கூட சமரசங்கள் செய்யப்பட்டன. எதிர்க்கட்சியில் அமர்ந்து, கோஷங்களை எழுப்பி, எதிர்ப்பு பேரணிகளை நடத்துவது மட்டும் போதாது. நாம் புனிதர்கள் அல்ல. வழிகாட்டுதல் வழங்கவும், மக்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும், உள்ளடக்கிய அரசியலை நடைமுறைப்படுத்துவதற்காகவும் தான் நாம் இங்கு வந்துள்ளோம். சித்தாந்தத்தை தியாகம் செய்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.
நாம் மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மகாயுதியிலும் சேர முடிவு செய்தபோது, மதச்சார்பற்ற சித்தாந்தத்திற்கு பெயர் பெற்ற சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்திருப்பதைக் கண்டோம். கடந்த காலங்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தனர். எங்கள் கவனம் வளர்ச்சியில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் சமூகத்தின் கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும், சமூகத்தின் எந்தப் பிரிவினரும் ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கட்சித் தொண்டர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் இறுதி முடிவு தலைமையிடம் உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் கட்சித் தலைவர்கள்தான் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்” எனப் பேசினார்.