Skip to main content

பினாயில் ஊழல்; வேலுமணி மீது வழக்குப் பாயும்! பாயும்! பாயும்! - கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

ddd

 

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் – ஜென்னி கிளப் எதிரில், கொடிசியா அரங்கம் அருகில் நடைபெற்ற, கோவை மாநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

 

நிறைவாகப் பேசிய அவர், ''இன்றைக்குத் தமிழகத்தில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. இது அரசாங்கமே அல்ல. சில ஊழல்வாதிகள் சேர்ந்து, தாங்கள் சம்பாதிப்பதற்காக ஒரு ஊழல் கோட்டையை எழுப்பி இருக்கிறார்கள். இதில் மிக முக்கியமானவர் ஊழலாட்சித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய வேலுமணி! வேலுமணி சில ஆண்டுகளுக்கு முன்புவரை எப்படி இருந்தார்? இப்போது எப்படி இருக்கிறார்? என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.

 

சுண்ணாம்பு பவுடர் வாங்குவதில், பினாயில் வாங்குவதில் ஊழல் செய்யும் ஒருவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் வேலுமணி. உள்ளாட்சி அமைப்புகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டானியல் ஜேசுதாஸ் என்பவர் பல தகவல்களை வாங்கி இருக்கிறார்.

 

25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர் தனியார் கடைகளில் 170 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் 842 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். பினாயில் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு கடையில் கிடைக்கிறது. அதை 130 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். சாக்கடை அடைப்பை சரி செய்யும் டிச்சு கொத்து 130 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் அதை 1,010 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். 1,500 மதிப்புள்ள மோட்டாரை 25 ஆயிரத்து 465 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

 

1,712 ரூபாய் மதிப்பிலான காப்பர் வயரை 8,429 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள். 870 ரூபாய் மதிப்பிலான லைட் பிட்டிங்கை 2,080 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள். இந்த வகையில் ஒரு ஊராட்சிக்கு வாங்கிய பொருட்களில் 1 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 500 கோடி ஊராட்சிகளில் மொத்தம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தைச் சுருட்டி இருக்கிறார்கள். இதனைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் டேனியல் ஜேசுதாஸ் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார் வேலுமணி!

 

சில நாட்களுக்கு முன்னால் 123 ஜோடிகளுக்கு வேலுமணி திருமணம் நடத்தி வைத்துள்ளார். அப்போது வாழும் காமராசர் என்று பழனிசாமியை புகழ்ந்துள்ளார். இதை விட பெரிய அவமானம் பெருந்தலைவர் காமராசருக்கு இருக்க முடியுமா? இப்படி வேலுமணி இலவசத் திருமணம் நடத்தி வைத்த அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீதான ஊழல் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

 

தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு புகார் அளித்திருந்தார்.

 

இது பற்றி லஞ்ச ஒழிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான விளக்கத்தை அரசு தரப்பால் தரமுடியவில்லை. அப்படி ஊழல் நடக்கவில்லை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அப்படி தமிழக அரசால் சொல்ல முடியவில்லை. அரசுத்தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சித் துறை அமைச்சர் மீதான புகார் குறித்து லோக்ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். அப்படியானால் முறைகேடு நடந்திருப்பதை அரசு தரப்பே ஒத்துக் கொண்டது என்று தானே அர்த்தம்? இப்படி ஊழல் செய்பவர் தான் வேலுமணி! அவர் ஊழல் மணி தான் என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டு விட்டது.

 

வேலுமணி ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை இந்த கோவையில் நிறுவி உள்ளார். இதில் அவரது சகோதரர்கள், பினாமிகள் நீங்கலாக யாரும் உள்ளே நுழைய முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் ஆளும்கட்சியைச் சேர்ந்த மற்ற காண்ட்ராக்டர்கள் கூட கோவை மாநகராட்சிக்கு உள்ளேயோ, இந்த மாவட்ட டெண்டர்களுக்கு உள்ளேயோ நுழைய முடியாது. அத்தகைய ஊழல் கோட்டையை உருவாக்கி வைத்துள்ளார்.

 

வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு சொந்தமான செந்தில் அண்ட் கோவும் - வேலுமணியின் பினாமியான ராஜன் என்பவரும் சேர்ந்து கோவை மாநகராட்சியை சுரண்டி முடித்துவிட்டார்கள். மிகச் சிறு டெண்டர்களை ஆரம்ப காலத்தில் எடுத்து வந்த அன்பரசன், வேலுமணி அமைச்சரான பிறகு கோடிக்கணக்கான மதிப்பிலான டெண்டர்களை எடுக்க ஆரம்பித்துள்ளார். கோவையின் அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார்.

 

கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளை, இந்த  அன்பரசனுடன் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்ததாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பே வெளியிடப்பட்டது.

 

வேலுமணி எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு, கான்ட்ராக்ட் பிசினஸ் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருடன் நண்பர் ஆனவர்களை வைத்து இப்போது அதே காரியத்தைச் செய்து வருகிறார். இவர்களோடு தனது சகோதரர் அன்பரசனையும் சேர்த்து விட்டு காண்ட்ராக்ட் எடுத்து வருகிறார் வேலுமணி.

 

எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆன பிறகு, துடைப்பம், ப்ளீச்சிங் பவுடர் வாங்குவதில் தொடங்கி பல கோடி ரூபாய்களுக்கான டெண்டர்கள் வரை அனைத்தும் மையப்படுத்தப்பட்டு, அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்கள் விடப்படுகின்றன. வேலுமணிக்கு வேண்டிய ஒரு நிறுவனத்தில்  2011-12 ஆண்டு வருவாய் 17 கோடி ரூபாய்தான் இருந்தது. வேலுமணி அமைச்சர் ஆனபிறகு அந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3,000 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.

 

டான்சி வழக்கும் இப்படித்தான் ஆரம்பித்தது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடங்கப்பட்டபோது, ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்து 1991-92ல் ஆரம்பித்தனர். அதே ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலமாக டான்சி நிறுவனத்தை வாங்கினர். ‘எப்படி அவ்வளவு பணம் ஜெயா பப்ளிகேஷனுக்கு வந்தது’ என்பதுதான் எங்களின் பிரதானக் கேள்வியாக இருந்தது. எனது வழக்கின் விளைவாக டான்சி நிலத்தை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்தார். அதே போல, எஸ்.பி.வேலுமணிக்கும் சில நிறுவனங்களுக்குமான தொடர்புகளுக்கு  வலுவான ஆதாரங்கள் உள்ளன. அது போன்ற வழக்கு தான் திமுக அரசு அமைந்ததும் அமைச்சர் வேலுமணி மீது நிச்சயமாகப் பாயும்! பாயும்! பாயும்!

 

இந்த ஊழல்களைக் கண்டுபிடிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள் என்றால் கோவை என்பதை தனது குத்தகைக்கு எடுத்துவிட்டதாக அராஜகம் செய்து கொண்டு இருக்கிறார் வேலுமணி. உங்கள் அராஜகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்குகிறது வேலுமணி அவர்களே!

 

ஊழல் செய்வது, அராஜகம் செய்வது, போலீஸை வைத்து மிரட்டுவது - கடைசியாக மக்களுக்குப் பணத்தைக் கொடுத்து ஒட்டு வாங்கலாம் என்று வேலுமணி நினைக்கிறார். மக்கள் சொத்தைக் கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது கேவலமாக இல்லையா?

 

இன்றைக்கு அமைச்சர் பதவியில் இருக்கிறார்- அதனால் அரசாங்க அதிகாரிகளும் காவல்துறையும் வேலுமணிக்கு தலையாட்டிக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சி மாறும். அன்று காட்சியும் மாறும். வேலுமணியின் ஊழலாட்சிக்கு முடிவுகட்ட- அராஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் கழகம் வென்றாக வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.