Skip to main content

1977 முதல் களம் காணும் அரசியல் பிரபலங்கள்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

tn assembly election political parties leaders

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இதனிடையே, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அந்த வகையில், 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் அரசியல் பிரபலங்கள் குறித்துப் பார்ப்போம்.

 

அண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 1971- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொடங்கி, கலைஞர் மறைவுக்குப் பிறகு நடக்கும் 2021- ஆம் ஆண்டு வரையில் நடந்த எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டு வரும் ஒரே தலைவராக உள்ளார் தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தற்போதைய காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரான துரைமுருகன். 11 முறை தேர்தல் களம் கண்டுள்ள துரைமுருகன் இரண்டு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். இதில் 9 முறை காட்பாடியிலும், 2 முறை ராணிப்பேட்டையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது 12- வது முறையாக மீண்டும் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

 

துரைமுருகனுக்கு அடுத்தபடியாக, அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் தனபால், அ.தி.மு.க.வில் இருந்து தற்போது தி.மு.க. வேட்பாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அ.தி.மு.க. முதன் முதலில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

 

இதில், கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 2001- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலைத் தவிர்த்து, மற்ற எல்லாத் தேர்தல்களிலும் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். 1996- ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியை ருசித்துள்ளார் கே.ஏ.செங்கோட்டையன்.

 

தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகரான தனபால், அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. முதன் முதலாக ஆட்சி அமைத்த 1977 தேர்தல் தொடங்கி 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011- ஆம் ஆண்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், 2016- ஆம் ஆண்டு அவினாசி சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்ற தனபால், தற்போது மீண்டும் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

 

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் இடம்பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை 10 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் இவர், இரண்டு தேர்தலில் மட்டுமே தோல்வி அடைந்தார். அதிகபட்சமாக சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மட்டும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.