Skip to main content

மும்மொழிக் கல்வி தேவையா? மாணவியர் நடத்திய விழிப்புணர்வுப் பட்டிமன்றம்!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

மாணவர்கள் மத்தியில் தமிழுணர்வையும் விழிப்புணர்வைவும் ஏற்படுத்தும் வண்ணம், அதிரடிப் பட்டிமன்றத்தை நடத்தியிருக்கிறது சென்னை மயிலாப்பூரில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளி. 
 

இங்கு நடந்த தமிழ்மன்ற விழாவில், 'மும்மொழிக் கொள்கை சாத்தியமா? தடையா?’ என்ற பரபப்பான தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.  இதைத் தமிழாசிரியர் திருமதி எஸ்தர் ஏற்பாடு செய்திருந்தார். 
 

அணிக்கு நான்கு மாணவியர் பங்கேற்க, பட்டிமன்ற நடுவராக பிரபல எழுத்தாளர் லதா சரவணன் பொறுப்பேற்றார். 

 

chennai


 

''மாணவர்களுக்கு மும்மொழி என்பது தடையே'' என்ற தலைப்பில் மாணவிகள் மதுமதி, வேதா, ஸ்வேதா, ஸ்வாதி ஆகியோர் வரிந்துகட்ட,  ''மும்மொழி என்பது சாதகமே'' என்று   மேரி, ஸ்ருதிகா, சனா, அம்ரிஸ்னி ஆகிய மாணவியர் பதிலுக்கு மல்லுக்கட்டினர்.
 

இது அரசியல் சார்ந்த தலைப்பு என்பதால் இரு அணி மாணவியரும் மிகவும் கவனமாகத் தங்கள் வாதங்களை எடுத்துவைத்தனர்.  அதே சமயம் அவர்கள் வாதத்தில் சூடு பறந்தது. 
 

மும்மொழி என்பது தடைதான் என்று வாதிட்ட மாணவியர் மதுமதி, வேதா, ஸ்வேதா, ஸ்வாதி ஆகியோர், தொன்மை மொழியான  நம் தாய்மொழியாம் தமிழை, இரத்தினக் கம்பளம் விரித்து வர்ணஜால வார்த்தைகளால் வரவேற்றார்கள். அவர்களின் வாதத்தில் எத்தனை எத்தனைச் சொல்லாடல்கள், எத்தனை எத்தனை உவமைகள்! அப்பப்பா.. அவையே மயங்கி உட்கார்ந்திருந்தது,  
 

”எந்த மொழியைக் கொடுத்தாலும் அதைத் தடையென்று நாம் ஏன் ஒதுக்கவேண்டும்? சாதிக்க வயது ஒரு தடையில்லை? எனவே எங்களால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்க முடியும். எனவே மும்மொழிக் கொள்கை சாத்தியமே” என்று சனாவும், அம்ரிஸ்வினி, மேரி, ஸ்ருதிகா ஜோடிகள் பேசினார்கள். 
நிறைவாக,  வாதிட்ட மாணவியருள்,  வள்ளுவனின் குறளைச் சொல்லி அழகாக தன் வாதத்தை ஆரம்பித்த மதுமதிக்கும் அழகான சென்னைத் தமிழில் கேள்விகளைத் தொடுத்து, அதற்கு பதிலையும் கொடுத்த வேதாவிற்கும் முதற் பரிசுகள் வழங்கப்பட்டன. 


 

மாணவியரின் பட்டிமன்றத்தை சுவையாக நடத்திய பட்டிமன்ற நடுவரான எழுத்தாளர் லதா சரவணன் தன் தீர்ப்புரையில்...” மேலும் மேலும் வாயில் திணிக்கும் உணவில், நாம் சுவையை எப்படி உணர முடிவதில்லையோ... அதேபோல் கட்டாயத் திணிப்பின் மூலம் நம்மிடம் நிறுத்தப்படும் எந்த ஒரு மொழியும் நம் மனதில் பதியப் போவதில்லை.  விருப்பம் இன்றி தரப்படும் கல்வியறிவு, வயிறார உண்டவனுக்கு மீண்டும் மீண்டும் விருந்து படைப்பதைப்போல் பெரும் சுமையாகிப் போகும். எந்த மொழியையும் எவரும் தாமாக ஆர்வமாகக் கற்பதில் தவறில்லை. ஆனால் இந்த மொழியைப் படித்துதான் ஆகவேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்கக் கூடாது. ஏற்கனவே இருக்கும் சுமைகளுக்கு மத்தியில் மற்றொரு சுமையை மாணவர்களின் பிஞ்சு முதுகில் ஏற்றக்கூடாது. ஒரு மொழியைத் கட்டாயப்படுத்தித் திணித்தால் அது அந்த மொழி மீதான வெறுப்பிற்குத்தான் வழிகோலும். எனவே என்னைப் பொறுத்தவரை  மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்றது” என்று அழுத்தம் திருத்தமாகக்  கூற, அவரது தீர்ப்பை ரசித்து, அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
 

பெரும்பாலான பள்ளிகள், ஆங்கிலம் தவிர்த்து  மாணவர்கள் வேறு ஏதாவது ஒரு மொழியில் பேசினால் உடனே அபராதம் போடும் இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற பள்ளிகள் தமிழ் மன்றம் அமைத்து, அதற்கு விழா எடுத்து, விருந்தினர்களை அழைத்து, கருத்தாழம் மிக்கச் சிந்தனைகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பட்டிமன்றங்களை நடத்துவது பாராட்டுக்குரியது.


 

-சூர்யா

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.