Skip to main content

பா.ஜ.க.வுடன் கூட்டணி! அ.தி.மு.க. வெற்றியைப் பாதிக்குமா?-நக்கீரன் சர்வே

Published on 22/03/2021 | Edited on 23/03/2021
ddd

 

இம்முறை அ.தி.மு.க. தொண்டர்களை மையப்படுத்தி தமிழகம் தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பொதுமக்களின் கருத்துகளையும் புறக்கணிக்கவில்லை.

 

டெல்டா மாவட்டத்தில் கோப அனல் வீசியது. ""நான் அ.தி.மு.க.வின் ஆதரவாளன். ஆனாலும் எனக்கு ஜெயலலிதா மீது சில வெறுப்புகள் உண்டு. அதே நேரத்தில் அவரது சமுதாயத்தினரை ஆடாமல் அடக்கி வைத்திருந்தார். ஆனால் இன்று சங்கரமடத்தின் கூடாரம் முதல் குடுமி வரை ஆடுகிறது. அதற்கு வழிவிட்டுவிட்டார் எடப்பாடி'' என கொக்கரிக்கிறார்கள் மடாலயங்களுக்கும் கோவில்களுக்கும் பெயர்பெற்ற கும்பகோணம் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பது இவர்கள், அடித்து வைத்திருக்கும் பணத்திற்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்கிற பயத்தினால்தான். அதேபோல சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றிவிடுவார். அந்த இடையூறு வராமல் இருப்பதற்கு மத்திய ஆட்சியின் தயவு தேவை. இவை அனைத்தும் தங்களுடைய பதவியை தக்கவைப்பதற்குத் தானே தவிர வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை'' என தெளிவாக எச்சரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும்.

 

""பா.ஜ.க.வை ஜெ. நிராகரித்தார். மோடி பிரதமராகவே சென்னை வந்தபோதும் எடப்பாடியைப்போல கூழைக்கும்பிடு போட்டு வரவேற்கவில்லை. பிரச்சாரத்தில் மோடியா? லேடியா? என பாட்ஷா பட ஸ்டைலில் கேள்வி கேட்டார். அந்த ஜெ. நிராகரித்த பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது சதி என 23 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள். மோடிக்கு எடப்பாடி பயப்படுவது போல, இந்திராகாந்திக்கு எம்.ஜி.ஆர். பயந்தார். ஆனால் எம்.ஜி.ஆரும் ஜெ.வும் மதவாத சக்திகளை வளரவிடவில்லை. பா.ஜ.க.வுக்கு 20 சீட் வாரி வழங்கியிருக்கிறார் எடப்பாடி. பா.ஜ.க. தயவில் ஆட்சி நடத்தியவருக்கு வேற வழியில்லை'' என்கிறார் திருப்பத்தூர் கனகராஜ்.

 

ddd

 

சேலம் ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த விஜயகுமார், ""ஜெ. மறைந்த பிறகு அ.தி.மு.க. நெருக்கடிகளைச் சந்தித்தது. அப்போது பா.ஜ.க. தயவால்தான் ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது தவறில்லை'' என்கிறார்.

 

நமது கருத்துக் கணிப்பில் 31 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தவிர வேறு வழியில்லை என சொல்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி 46 சதவிகிதம் பேர் ஜெ. நிராகரிக்கிற பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தவறு என அடித்துச் சொல்கிறார்கள்.

 

ddd

 

பா.ஜ.க.வுடனான கூட்டணி நிச்சயம் அ.தி.மு.க.வை பாதிக்கும். விவசாய சட்டம் போல எண்ணற்ற சட்டங்களைப் போட்டு மக்களை வறுத்து எடுத்து வருகிறது பா.ஜ.க அரசு. நீட், பெட்ரோல் என ஏறும் விலைவாசிக்கு எதிராகப் போராட்டம் நடந்துவருகிறது. அத்துடன் பா.ஜ.க. சனாதன கொள்கையை முன்னெடுத்து தமிழகத்தில் இந்தியைத் திணித்துவருகிறது. பா.ஜ.க.வின் இந்த முயற்சிகளுக்கு அ.தி.மு.க. ஆமாம் சாமி போட்டுவருகிறது. இது அ.தி.மு.க.வுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் தர்மபுரி மக்கள்.

 

பா.ஜ.க.வுடனான கூட்டணி அ.தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்குமா என்கிற கேள்விக்கு 63 சதவிகிதம் பொது மக்கள் பாதிக்கும் என்றே தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

 

""மோடி அறிவிச்ச திட்டங்களில் ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறாரா? மக்களை அலையவிட்ட பி.ஜே.பி.யை மக்களும் அலையவிடுவாங்க'' என்கிறார் கோவை கவுசல்யா.

 

ddd

 

பி.ஜே.பி.க்கு 20 தொகுதிகள் ஒதுக்கியிருப்பது அதிகம் என 57 சதவிகிதம் பேரும் அந்தத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் எளிதாக வெற்றி பெறும் என 32 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா. உட்பட பல கட்சிகள் இருக்கிறது. அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் மிரட்டல் தொனியில் பேசமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க.வினர் மிரட்டல் தோரணையில்தான் அ.தி.மு.க.வினரிடம் பேசுகிறார்கள்.

 

ddd

 

""மத்தியில் ஆட்சி இருக்கிறது என அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டி காரியம் சாதிக்கிறார்கள். அதுபோலத்தான் முதல்வரையும் மிரட்டி, கூட்டணி அமைத்துக்கொண்டு சீட்டுகளையும் கூடுதலாக வாங்கியிருக்கிறார்கள். அந்த சீட்டில் ஒரு சீட்கூட பா.ஜ.க. வர வாய்ப்பில்லை'' என்கிறார் பள்ளப்பட்டி அ.தி.மு.க. விசுவாசி ஆறுமுகம்.

 

எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளின் கடைசிக்கட்டத்தில் நிராகரித்த ஜெயலலிதாவையே அந்தக் கட்சிக்காரங்க ஏத்துக்கிட்டாங்க. ஜெயலலிதா நிராகரிச்ச பி.ஜே.பி.கூட கூட்டணி வச்சா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாதுன்னு எடப்பாடி ஏத்துக்கிட்டார்.

 

ddd

 

""சென்ட்ரல்ல இருந்து ஆட்டி வைக்கிறவங்களுக்கு 20 சீட் கூட கொடுக்கலைன்னா இங்க டங்குவாரு கழன்றுடும்ல. எடப்பாடிய ரொம்ப கெட்டிக்காரர்னு சொன்னாங்க. ஆனா ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வால அவுட் ஆகப்போகுது''ன்னு சொல்றாரு விருதுநகர் ஹைகோர்ட் ராஜன்.

 

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்..? - நக்கீரன் ஸ்பெஷல் சர்வே ரிசல்ட்!

 

-நக்கீரன் சர்வே குழு

ராம்கி, ஜீவாதங்கவேல், பரமசிவன், சக்திவேல், எஸ்.பி.எஸ், மனோ, ராஜா, பகத்சிங், செல்வகுமார், மணிகண்டன், அருண்குமார், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், அண்ணல், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், காளிதாஸ்
தொகுப்பு: -தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ராம்குமார், விவேகானந்தன், விவேக்

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.