விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம், அம்பேத்கர் சிலை மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்த நாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைப் பற்றி படிக்கச் சொன்னார். இவரது பேச்சு அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது.
மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அண்மையில் தனது 68வது படத்தை முடித்தவுடன் சினிமாவில் இருந்து 3 வருடம் விலகி, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்துச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து நேற்று பனையூரில் தனது மக்கள் மன்றம் சார்பாக இருக்கும் 234 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசித்தார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மற்றும் நாளை தொடரும் என நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளான வருகிற ஜூலை 15 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.