Skip to main content

“பணமோ, வார்த்தைகளோ இதனை ஈடுசெய்யாது”- சிம்பு சோகம்

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

சென்னை பூந்தமல்லியிலுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக இண்டஸ்டிரியல் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா, புரொடக்‌ஷன் அசிஸ்டண்ட் மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என்ற மூன்று பலியாகினர். மேலும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இந்த விபத்து நிகழ்ந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 

aas

 

 

இந்நிலையில் கிரேன் ஆப்பரேட்டர் மீது மூன்று வழக்கு பதியப்பட்டு, போலீஸார் கைது செய்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா மீது போலீஸார் நான்கு வழக்குகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் கமலுக்கும், ஷங்கருக்கும் நசரத்துப்பேட்டை காவல் நிலையம் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் மாநாடு பட ஷூட்டிங்கில் நடிக்க தொடங்கிய சிம்பு இந்த விபத்து குறித்து சோகமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப் படுகிறது. 

அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. 

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது. 

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். 

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். 

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். 

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்