Skip to main content

“இரண்டு ஆண்டுகளாக ஆசைப்பட்டேன்” - விஜயகாந்த் குறித்து எஸ்.ஏ சந்திரசேகர்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
sa Chandrasekhar about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர், “என் இனிய நண்பர் விஜயகாந்த்தை உயிரோடு இருக்கும் போதே ஆறத்தழுவி முத்தமிட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசைப்பட்டேன். அதற்காக முயற்சியும் செய்தேன். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது ஒரு உயிரற்ற உடலை பார்க்ககூடாது என கடவுள் நினைத்தாரோ இல்லையோ, தெரியவில்லை. இந்த நாளில் தான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் அரசியலுலகிலும் ஒரு சகாப்தம் இன்று முடிந்திருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட வேறொன்றும் தெரியவில்லை” என்றார். 

சார்ந்த செய்திகள்