தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்த எஸ்.பி.ஜனநாதன், சமீபத்தில் மரணமடைந்தார். அவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த ‘லாபம்’ திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நடந்து அனைவரையும் சோகத்திற்குள்ளாக்கியது. அதன் பிறகு, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து, திட்டமிட்டபடி படத்தினை திரைக்குக் கொண்டுவரும் முனைப்போடு படக்குழு பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில், ‘லாபம்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘யாழா யாழா...’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாடல் இன்று (22.04.2021) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இப்பாடலை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு சமர்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.