
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. நேற்று மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எழுப்பிய சத்தம் மற்றும் புகை மூட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மத்தளம்பாறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து படக்குழு ஒப்புதல் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு பழையபடி மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.