தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பில் அதிக தேசிய விருதுகள் வாங்கியிருப்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை சென்று நடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தற்போது ஆங்கிலத்தில் ' த க்ரே மென் ' , தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்', மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்', தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் 'வாத்தி' படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இதனையடுத்து 'ராக்கி' பட இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டது. அருண் மாதேஸ்வரன் தற்போது செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் 'சாணி காயிதம்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் படத்திற்கான ஆரம்பகட்டப்பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இந்தாண்டின் மத்தியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை சத்யாஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.