Skip to main content

"இப்புகழும் பணமும் அம்மா பட்ட அவமானத்திற்கு ஈடாகாது...." ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா பாசம்!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

A. R. Rahman

 

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், 'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.

 

சிறு வயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால், தாயார் கரீமா பேகம் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். கடுமையான வறுமைச் சூழலை அவர்களது குடும்பம் எதிர்கொண்டாலும், தன் மகனின் இசைக் கலைஞனாக வேண்டும் என்ற லட்சிய பயணத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் அவரது தாயார் பார்த்துக் கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவரிடம் இருந்த ஏராளமான இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைத்த வருவாய் மூலம் தனது குடும்பத்தினை நடத்தி வந்தார். தன் அம்மா குறித்து பல நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அதில் சிலவற்றை காண்போம்.

 

ஒரு நேர்காணலில் பேசும்போது, "நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் என் அம்மாதான் காரணம். அப்பா இறந்தபின் அவர் செய்த வேலையை நீ செய் என்றார். எனக்கு எலெக்ட்ரானிக் மற்றும் கணினி மீது ஆர்வம் இருந்ததால் அத்துறையில் போகலாம் என்று நினைத்தேன். குடும்பச்சூழலை கருத்தில் கொண்ட என் அம்மா 'உனக்கு இசை தெரியும். அதிலேயே சம்பாதிக்க முடியும்' எனக் கூறினார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாயார் குறித்து எழுதிய கடிதம் ஒன்றை அவரது தங்கை ஒரு மேடையில் உருக்கமாக வாசித்தார். அக்கடிதம், "தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்பது நபி மொழி. என்னை பொறுத்தவரை இது மிகவும் உண்மையே. ஏனெனில் என் தயார் உறுதியாக இருந்து என்னை இசையில் ஈடுபடுத்தியிருக்காவிடில், இந்த வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அன்பையும் இழந்திருப்பேன். இந்தப் புகழும் பணமும் எங்களை வளர்க்க என் தாய் சிந்திய கண்ணீரையும் பட்ட அவமானங்களையும் ஈடு செய்ய முடியாது. நான் என்னைத் தாழ்வாகவும் வாழ்க்கையை சுமையாகவும் எண்ணிய போது, நீ ஏன் மற்றவர்களுக்காக வாழக் கூடாது, உன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்குமேயென என் தாய் கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவில் உள்ளது. அந்த வார்த்தைகள்தான் வாழ்வதற்கும் சிறந்த பணிகளை நான் செய்வதற்கும் தொடர்ந்து உதவியாக இருக்கிறது.

 

என்னுடைய முதல்பாடலான சின்னசின்ன ஆசையின் இசை பதிவிற்கு முதல்நாள் என்னுடைய இசை நண்பர்கள் என்னைக் கைவிட்டபோது என் தாய் என்னுடன் இருந்தார். இசை உன்னிடம் இருக்கிறது. வேறு யாரும் தேவையில்லை என ஆறுதல் கூறிய அவர், பாடல் பதிவு முடிந்தவுடன் அப்பாடலை கேட்டு கண்ணீர் விட்டார். என் பிரார்த்தனை பலித்துவிட்டது, இப்பாடலில் தெய்வீக அருள் உள்ளது என்றார். என் தாயைப் பற்றி எழுத வேண்டுமென்றால் அது பெரிய புத்தகமாகிவிடும்". 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரி குளறுபடிகள்; காவல் துணை ஆணையர் மீது நடவடிக்கை

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

AR Rahman Music Concert Action against Deputy Commissioner of Police

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார்.

 

இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் (10.09.2023) 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூட கடும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர். மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு எனக் குற்றம் சாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், "கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட்  நகலை பகிரவும்" எனக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

அதே சமயம் இந்த இசைக் கச்சேரி ஏகப்பட்ட குளறுபடிகளை ஏற்படுத்திய நிலையில், அந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் தாம்பரம் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தார்.  அதில் போக்குவரத்துக்கு நெரிசல், அதிக கூட்டத்துக்கான காரணம், வாகனம் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவை குறித்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தி இருந்தார்.

 

AR Rahman Music Concert Action against Deputy Commissioner of Police
தீபா சத்யன்

 

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரியான பள்ளிகரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது மட்டுமின்றி சென்னை பெருநகர கிழக்கு ஆணையர் திசா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திருநெல்வேலி நகர கிழக்கு காவல்துறை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

"பழசெல்லாம் தூக்கி வீச கேட்குதா என் பாச" - ‘மாமன்னன்’ லிரிக் வீடியோ

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Manna Maamanna Lyric video

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியரும், தமிழ் ராப் பாடகருமான தெருக்குரல் அறிவு பாடியிருக்கிறார். “கேக்குதா என் பாச... எனக்குள்ளே ஒரு ஓச” எனத் தொடங்கும் இப்பாடலை அவரே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி வந்த படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக்கல் வீடியோவுமே வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையிலேயே வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் படம் வெளியான பிறகே தெரிய வரும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.