Skip to main content

"வேறு எங்கும் கிடைக்காத சௌகரியமும், வசதியும் இங்கு கிடைத்துள்ளது" - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

aishwarya rajesh talk about suzhal web series

 

தமிழ் திரையுலகில் திரைப்படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்துள்ள வெப்  சீரிஸ் 'சுழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இருவரும் இணைந்து இயக்கும் இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியான சுழல் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் வரும் 17 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "எனக்கு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி மீது நல்ல மரியாதை உண்டு. ஏனெனில் அவர்கள் கலை மீது அளவற்ற பற்று கொண்டவர்கள். கொரோனா காலகட்டத்தின் போது என்னை அழைத்து வலைதள தொடரில் நடிக்க வேண்டும் என கேட்டார்கள். நான் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்த தொடர் இவ்வளவு பிரம்மாண்டமாக வெளியாகும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

இந்த தொடரில் நடிப்பதற்கு முன் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதில் சில அத்தியாயங்களில் நான் இல்லை. அப்போது ஏன் இந்தத் தொடரில் என்னை தேர்வு செய்தார்கள்? என யோசித்தேன். ஆனால் கதை முழுவதும் படித்த பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணரமுடிந்தது. நந்தினி என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் தங்கை காணாமல் சென்று விடுவாள். அவளை தேடி நான் பயணப்படுவேன். கதையில் பல இடங்களில் நந்தினி, என் நிஜத்தை பிரதிபலித்திருப்பாள்.

 

நான் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இந்த தொடரில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த சௌகரியங்களும், வசதிகளும் வேறு எங்கும், எப்போதும் கிடைத்ததில்லை. அதனால் மிக சிறந்த அனுபவத்தை உணர்ந்தேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களும் நேர்மறையான அதிர்வை வெளிப்படுத்தி, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்