இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வந்த 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, நடிகர் தனுஷ் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் 'அத்ரங்கி ரே' என்ற இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன், ஜவஹர் மித்ரன், செல்வராகவன் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் பிரபல செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை 'அத்ரங்கி ரே' படத்தை இயக்கி வரும் பிரபல பாலிவுட் இயக்குனரான ஆனந்த் எல் ராய் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இயக்குனர் ஆனந்த் எல்.ராய், விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கையைத் தழுவி திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் உள்ளார் என்று முன்னரே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.