Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #22

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

maayapura part 22

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ஒருவரிடம் நாம்  நூறு சதம் அன்பு காட்டவும் முடியாது. ஒருவரை நாம் நூறு சதம் வெறுக்கவும் முடியாது. ஒருவருக்காக ஒருவர் உயிரையே தரக்கூடிய கணவன் மனைவி உறவில்  கூட, சில நேரங்களில் புரிதலில் குழப்பங்கள் வரக்கூடும். 

 

உறவுகளில் புனிதமானதும் ஆத்மார்த்தமானதுமான  கணவன்-மனைவி உறவுக்கே இப்படி புரிதலின்மை என்றால் பிற உறவுகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். எல்லா உறவுகளிடமும் கோபம், பொறாமை, ஆதிக்க மனப்பான்மை, தான் என்ற எண்ணம் இப்படி நிறைய உணர்வுக் கலவைகள் இருக்கும். சாம்பாரில் இருக்கும் முக்கியமான கலவைகள் போல.  சாம்பாரில் பருப்பு சேர்த்தால்தான் அந்த சாம்பார் மணக்கும். அதுபோலத்தான் ஆயிரம் உறவுகளுக்கிடையே பாசம் என்ற உணர்வும் இழையோடிக் கொண்டிருக்கும். பாசம் இருந்தால் தான் உறவுகளுக்கு உயிர் இருக்கும்.

 

மாமியார்-மருமகள் இருவருக்குள்ளும் வாய் கலப்பு, கைகலப்பு எல்லாம் சில இடங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மூன்றாவது நபர் வந்து மாமியாரைத் திட்டினால் மருமகள் விடமாட்டாள். மாமியாருக்கு பரிந்து கொண்டு வரிந்து கட்டிக்கொண்டு வருவாள், மருமகளைத் திட்டினால் மாமியாரும் மருமகளுக்காகப் பரிந்து கொண்டு வருவார். இது உலக அளவில் நிகழும் மனதின் மாயா ஜாலம்.  அமெரிக்காவாக இருந்தாலும் சரி  அமிஞ்சிக்கரையாக இருந்தாலும் சரி, இந்த மாமியார் மருமகள்கள் சைக்காலஜி... புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கும்.

 

கூட்டுக் குடும்பமாக இருந்தால் குறை கூறுதல்கள் அதிகம் அரங்கேறும். பாரபட்சமின்றி அனைவரையும் பற்றி கற்பனையில் நினைக்க முடியாத அளவிற்கு ஒவ்வொருவரும் குறைகள் கூறுவார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் ஒருவர் மீது ஒருவர் பாசத்தைக் கொட்டிப் பேசுவார்கள். இது பெண்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒரு செயல். இரவெல்லாம் கணவரிடம் மாமியார், நாத்தனார், பற்றி அவர் காது அறுந்து ரத்தம் வருமளவிற்கு குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பார்கள். மறுநாள் காலையில் நாத்தனாரை சாப்பிடச் சொல்லி, ஊட்டி விடுவார்கள். இதைப் பார்க்கும் கணவனுக்கு குழப்பத்தில் பைத்தியம்தான் பிடிக்கும்.

 

மேலோட்டமாக பார்த்தால் பெண்களில் இந்த குணத்தை அனைவரும் கிண்டலாகவும் கேலியாகவும் குறையாகவும் பட்டிமன்றங்களில் கூட பேசியிருப்பார்கள். உளவியல் ரீதியாக அணுகினோம் என்றால், அதன் யதார்த்தம் புரியும். மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படும்  கோபம், பொறாமை இப்படிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டாமல் குப்பை மாதிரி மனதிற்குள்ளேயே போட்டு அழுத்திக் கொண்டே இருந்தால் அதிலிருந்து மோசமான வாடைதான் வரும். அவ்வப்போது அந்த உணர்வுகளைக் கொட்டிவிட்டு மனதை எப்போதும் அன்பு என்னும் மல்லிகை பூவால் நிரப்பி வைத்து இருந்தோம் என்றால், நம்மை சுற்றி எப்போதும் நறுமணம் இருந்து கொண்டே இருக்கும். 

 

பெண்களுக்கு இதய நோய் அதிக அளவு வருவதில்லை. திடீரென்று வரும் கார்டியாலிக் அரெஸ்ட் வருவதில்லை. பெண்கள் இதய பலவீனமானவர்கள் அல்ல. உணர்வுகளாலும் அன்பாலும் மனதை ஆளத் தெரிந்தவர்கள்.

 

சங்கவியை அந்த வீட்டில் அனைவருக்கும் பிடிக்காது என்பதற்கான காரணங்கள், ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நிறைய இருக்கும். தங்கத்திற்கு தன் அண்ணன் மகள் இருக்க வேண்டிய இடத்தில் சங்கவி இருக்கிறாள் என்கிற கோபம் வெறுப்பாக மாறியுள்ளது.

 

ஆசையாக  நட்டு வளர்த்த ரோஜாச் செடியில் எப்போது பூக்கும் என்று, பார்த்துப் பார்த்து பராமரித்து பூப்பூக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்த நொடியில், அதை வேறொருவர் தன் கண்முன்னே பறித்துச் சென்றால் மனநிலை எப்படி இருக்குமோ அந்த மனநிலையில் கொதித்துக் கொண்டிருந்தாள் புவனா. 

 

ரோஜாப் பூவிற்கே  கோபம் வருமென்றால்... புவனாவின் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டாளே சங்கவி. அதனால் புவனாவின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று அந்த கோபத்தையும் அன்பாக மாற்ற முயன்று கொண்டிருந்தாள் சங்கவி. மணியின் மனைவி மல்லிகாவிற்கு சங்கவி மீது பொறாமை. தன்னை விட அறிவு, படிப்பு, அழகு என அனைத்திலுமே சங்கவி மிகையாக இருப்பதால், அவற்றின் மீது மல்லிகாவிற்கு எல்லைமீறிய பொறாமை இருந்தது. இதுவும் சங்கவிக்குப் புரிந்தது.

 

தன்னை மாற்றிக் கொள்வதும் சுற்றியுள்ளவற்றை மாற வைப்பதும் காலத்தால் மட்டுமே முடியும். அந்த காலத்தின் மாற்றத்திற்காகத் தான்  காத்திருந்தாள் சங்கவி. இதற்கிடையிலும், யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் போட்டித் தேர்வுக்காக அவள் படித்துக் கொண்டிருந்தாள். நாம் ஒரு தவறு செய்கிறோம் என்றால் அதை மறைக்க பிறரின் கவனத்தை வேறு ஒரு பக்கமாகத் திசை திருப்புவோம். சங்கவியும் தங்கத்தின் மீது அதிக பாசமாக இருந்தாள். 

 

தங்கத்தை அத்தை என்று அழைத்தவள், அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள். கண்ணுசாமியோ, தன் அம்மாவின் உடைந்த கைக்கு  சிகிச்சை கொடுப்பதை அருகில் இருந்து கவனிக்க வந்தவர், அம்மாவின் கை சரியான பிறகும்  கூட, அந்த வீட்டைவிட்டுப் போக மனமில்லாமல், தங்கத்தின் வீட்டிலேயே தங்கிவிட்டார். தங்கையின் வீட்டில் நல்ல சாப்பாடும் ஓய்வும் இருப்பதால் தனக்கு ஒரு வீடு இருப்பதையே மறந்து விட்டார். புவனா செல்லமாக வளர்ந்த பெண் என்பதால் சாப்பிடுவதும் உறங்குவதும்  என்ற வேலையை மட்டுமே அறிந்து வைத்திருந்தாள். 

 

புவனா குழந்தையாக இருக்கும்போது அவள் பிறந்த நாள் அன்று, பணத்தைப் படுக்கை போல விரித்து அதில் அவளைப் படுக்க வைத்துப் புரட்டி எடுத்து விளையாடி  இருக்கிறார் கண்ணுசாமி என்று, அவரின் பெருமைகளை ஒருமுறை தனம்மா பாட்டி பேசக் கேட்டிருக்கிறாள் சங்கவி. அதனால் புவனா அதிகமாக குரல் கொடுக்கும் போது சங்கவி அவளுக்கு சேவை செய்து கொண்டுதான் இருந்தாள்.

 

சங்கவிக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும். ஒருநாள் மல்லிகா அக்கா, தங்கம், மணி எல்லாரும் என்னவோ கூடிக் கூடி, ஐ.நா.சபை மீட்டிங்கைப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். 

"த..சங்கவி, மல்லிகாவை எந்த வேலையும் செய்யவிடாமப் பார்த்துக்க. அவ உண்டாகி இருக்கா.. புரிந்ததா? பெத்தவங்க ஆசீர்வாதத்தோடு நடந்த கல்யாணம். அதனால வாழை மரம், குலை தள்ள ஆரம்பிச்சுடுச்சு, பெத்தவங்க வயிறு எரிய நடந்த கல்யாணம்... பூக்காம, காய்க்காம  பட்ட மரமாகப் போகுதுன்னு...’ தன் தாய்மையை மறந்து மருமகளிடம், வாயில் நெருப்பை கொப்பளித்து உழிழ்ந்தாள்  தங்கம். சங்கவிக்கு மல்லிகா கர்ப்பமாக இருக்கிறாள் என்பது மட்டும் தான் புரிந்தது. தங்கம் கொடுத்த சாபம் எதுவும் புரியவில்லை. புரியக்  கூடிய வயதும் இல்லை. இது  ஏனோ தங்கத்திற்குத்  தெரியவில்லை. 

"அக்கா ரொம்ப சந்தோஷங்கா" என்று மல்லிகா கையைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துச் சொன்னாள் சங்கவி. பெருமையாக தலையாட்டினாள் மல்லிகா.

 

சங்கவியை அம்மா திட்டுவதை கேட்டுக்கொண்டே படுத்திருந்தான் அசோக். சங்கவி போனதும் "அம்மா ..நீங்க சாபம்  தரும் அளவிற்கு கொலையா செய்துவிட்டேன்? பெற்ற மகனுக்குப் பிள்ளை பிறக்க கூடாது என சாபம் தரும் தாய் உலகத்திலேயே நீ மட்டும் தான் இருப்ப மா. பரவாயில்ல. எனக்கு குழந்தை பிறக்க வேண்டாம்.  என்னைக்கும் நான் மட்டும் உன் மகனாய் இருக்கேன் மா" என்று அசோக் கண்ணீருடன் சொன்னதும் தான், ’சங்கவியை மருமகளாக மட்டும் பார்த்து வெறுப்பைக் கொட்டுகிறோம். அசோக்கின் மனைவியாக நினைக்கலையே’ என்று லேசாக வருந்தினாள் தங்கம்.

"பூவுள்ளமங்கை பொன் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாங்கற, கதையா... ஏண்டி . தங்கம் பாவம் அந்த பொண்ணு. ஏண்டி அதுக் கிட்ட வம்பு பண்றே?’ என்று, சற்று அதட்டலாகவே கேட்டாள் தனம்மா பாட்டி.  அம்மாவை எதிர்த்துப் பேசாமல், தங்கம் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அந்த வீட்டில் மல்லிகா செய்யும் மிகச் சிறந்த வேலையே காலை மாலை இருவேளையும் துடைப்பம் எடுத்து வீட்டைப் பெருக்குவது தான். இனிமே அந்த வேலையில் இருந்தும் விடுதலை அளிக்கப்பட்டது. காலையில் எழுந்திருக்க வேண்டியது, குளித்து முடித்து உளுந்துக் கொடி ஆயறத்துக்கு, புளி ஆயறத்துக்கு, உளுந்து உடைக்கறதுக்கு, அரிசி குத்தறத்துக்கு  வருகிற பண்ணை ஆட்களுடன் அரட்டை அடிக்க வேண்டியது, தாயம் விளையாட வேண்டியது, சொக்கட்டான் ஆட வேண்டியது, சாப்பிட வேண்டியது, தூங்க வேண்டியது என்று மல்லிகா, புவனா, நாகம்மா இவர்களின் பொழுது இன்பமாக கழிந்தது. 

 

இந்தக் குழுவின் தலைவர் மணியோ, தனக்கு ஒரு வாரிசு கொடுக்கப் போகிறாள் என்றவுடன் மல்லிகாவைத் தரையிலேயே நடக்க விடுவதில்லை. மணி குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கத்தட்டில் வைத்து அவளைத் தாங்கினர்.

 

குடும்பத்தில் ஒருவர் மீது காட்டும் வெறுப்பு இன்னொருவர் மீது பாசமாக மாறும். அப்படித்தான் சங்கவி மீது காட்டிய வெறுப்பானது மல்லிகா மீது பாசமாக மாறியது. தனம்மா  பாட்டி மட்டும் சங்கவி மீது பாசத்தைக் காட்டினாள். சங்கவியும் பாட்டிக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செய்தாள்.

"கருத்தரிச்சு  இருந்தாலும் காடு கழனி எல்லாம் களை பறிச்சு,  கட்டு  தூக்கி, கருப்பஞ் சோலையில் புள்ள பெத்து, சோள தட்டில்  படுக்க வைத்து, சோளத்தை கிழிச்ச கூலியில் சோத்தை பொங்கிச் சாப்பிட்டு, சோதனையை சுமந்த பொம்பளை பொறப்பிது. இந்த வீட்டில் என்னடான்னா நடக்க பூவிரிச்சு, படுக்க பஞ்சு விரிச்சு. குளிக்க  பன்னீரு ஊத்தி,  எலிசபெத் ராணியாட்டம் தாங்கறாங்க” என்று தனம்மா பாட்டி மல்லிகாவைக்  கிண்டல் செய்தாள்.

 

ஒருநாள் காலையில் வாசலில் வில்லு வண்டி சத்தம் கேட்டது. வந்தது மல்லிகா குடும்பத்தினர். மல்லிகாவின் அண்ணன்கள் மூன்று பேரும் அக்காக்கள் இரண்டு பேரும் குடும்பத்துடன்  இங்கே குவிந்தனர். மல்லிகா மாசமாக இருப்பதைப் கேள்விப்பட்டு  அவளைப் பார்த்துவிட்டு  அப்படியே, மல்லிகாவின் அம்மா காசிக்கு போவதை சொல்லிவிட்டு போவதற்காகவும்  வந்தனர். தலைவாழை இலை போட்டு, இலை நிறைய விருந்து வைத்து வயிற்றுக்கும் வாய்க்கும் இடைவெளி இல்லாப்  பாலம் போட்டு, விருந்து வைத்தார்கள்.

 

சங்கவியின் மனதின் ஓரத்தில் சீர்செனத்தியோட  வந்த தன் வீட்டு மக்களை ஒரு வாய் காபி தண்ணியோட விரட்டி விட்ட நிகழ்வு ஏனோ நிழலாடியது.  

 

ஒரு  நாள்  வெள்ளிக்கிழமை என்று வீட்டை எல்லாம் கழுவி வைத்திருந்தாள் சங்கவி. எப்போதும்போல மல்லிகா கண்களை அந்தரத்தில் மேய விட்டு, கால்களை வானத்தில் பறக்க விட்டு வந்தவள், தரையில் வழுக்கி  டமால் என்று சத்தத்துடன் விழுந்தாள். அடுத்த  நொடியே அந்த வீடு அணுகுண்டு விழுந்த மாதிரி ஆனது.

 

( சிறகுகள் படபடக்கும் )

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)