Skip to main content

சோயிப் மாலிக்கை மாமா என்றழைத்த இந்திய ரசிகர்கள்! (வீடியோ)

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
malik

 

 

 

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவை காதலித்து மணமுடித்துக் கொண்டவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். அதுமட்டுமின்றி, தனது அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்டவர் அவர். அந்தவகையில், ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய ரசிகர்கள் மாலிக்கிடம் அன்பைக் காட்டிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
 

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின், சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, சோயிப் மாலிக் மற்றும் சர்ஃபராஸ் அகமது இணை சிறப்பாக ஆடியது. இதன்மூலம், 237 ரன்களை அந்த அணி குவித்தது. இருப்பினும், ரோகித் சர்மா மற்றும் சிகர் தவான் ஆகியோர் சதமடித்து இந்திய அணியின் அபார வெற்றிக்கு வித்திட்டனர். 
 

இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த இன்னிங்ஸின்போது, பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தார் சோயிப் மாலிக். அப்போது, மாலிக்கின் பின்புறம் இருந்த இந்திய ரசிகர்கள் மாலிக்கை நோக்கி, ஜீஜூ.. ஜீஜூ என்று செல்லமாக அழைத்தனர். மாலிக்கும் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பின்னால் திரும்பி கைகளை அசைத்தார். ஜீஜூ என்றால் அக்காவின் கணவர் அல்லது மாமா என்று பொருள்படும். இந்த ருசிகர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. 
 

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

டேட்டிங் செய்த நடிகையுடன் திருமணம் - சானியா மிர்சாவை பிரிந்த கிரிக்கெட் வீரர்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Sania Mirza divorce Shoaib Malik and Shoaib Malik marriage Pakistan actress

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக், 2006ஆம் ஆண்டு ஆயிஷா சித்திக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து, அதே ஆண்டு டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக சமீப காலமாக தகவல் வெளியானது. ஆனால் இருவரின் தரப்பிலும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனிடையே சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் டேட்டிங் செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, கணவரை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.