Skip to main content

பாகிஸ்தான் ரசிகருக்கு 9 ஆண்டுகளாக டிக்கெட் வாங்கிக்கொடுக்கும் தோனி...

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய ரசிகர் என்றால் அது சச்சின் ரசிகரான சுதிர் தான். அவருக்கடுத்து பரிச்சயமானவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 'சிகாகோ சாச்சா' என்பவர்.

 

dhoni sponsors chicago chacha for india pakistan match tickets

 

 

அனைத்து இந்தியா பாகிஸ்தான் ஆட்டங்களிலும் சுதிருடன் நின்று இந்திய, பாகிஸ்தான் அணிகளை உற்சாகப்படுத்துவார். தற்போது அவர் குறித்த சுவாரசிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கு கடந்த 9 ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு டிக்கெட் வாங்கி தருவது தோனிதான் என தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த 2011-ம் ஆண்டு மொஹாலியில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில், தோனிதான் அவருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார். அன்று முதல் தற்போது வரை நடைபெறும் அனைத்து இந்தியா பாகிஸ்தான் ஆட்டங்களுக்கும் தோனி எப்படியாவது எனக்கு டிக்கெட் எடுத்து கொடுத்துவிடுவார்.

தோனியுடன் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்பு கொண்டு பேசுவேன். ஆனால் அவருக்கு போன் செய்ய மாட்டேன். அது அவருக்கு தொந்தரவாக அமையும்.

தோனி ஒரு மிகச்சிறந்த மனிதர், மனிதநேயம் மிக்கவர். எனக்கு 12 முறை நெஞ்சு வலி வந்துள்ளது. எனது உடல்நிலை உள்ள சூழலுக்கு நான் பிரயாணங்கள் மேற்கொள்ள கூடாது. ஆனாலும் கிரிக்கெட்டுக்காக நான் எதையும் செய்வேன்" என கூறியுள்ளார்.