Skip to main content

கள்ளு குடித்தால் உயிரை குடிக்கும் நிபா வைரஸ்!

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

இன்று கேரள மாநிலத்தையே பீதியடைய வைத்துக் கொண்டுள்ளது நிபா வைரஸ் காய்ச்சல். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துவிட, அவர்களின் இரத்தம், சளி மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

 

bat


 

 

 

இவர்கள் இறப்பிற்கு நிபா வைரஸ்தான் காரணம் என கண்டறியப்பட்டது. அடுத்து அவர்களுக்கு சிகிச்சை செய்த நர்ஸ் இறந்துவிட பரபரப்பு அதிகமானது. அடுத்தடுத்து மெம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மலபுரம் மாவட்டத்தில் 7 பேர் இறந்தனர். இந்த காய்ச்சல், தொற்று நோய் போன்று வேகமாக பரவி வருவதால் நோய் தாக்கியவர்களின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே கேரளா முழுவதும் கடுமையான பீதி நிலவி வருகிறது. கேரள மாநிலம் அடுத்து தமிழகத்தின் எல்லையிலும் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

 

மலேசியா நாட்டில் கம்பங் சுங்காய் நிபா என்ற கிராமத்தில் 1998 இல் அதிகபடியான பேர் மர்ம காய்ச்சலுக்கு இறந்து போனார்கள். அவர்களின் இறப்புக்கு காரணமான வைரஸ் அதே கிராமத்தின் பெயரில் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது. அப்போது 477 பேர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகினர். அதில் 252 பேர் இறந்தனர். முதலில் எப்போதும் போல மருத்துவ உலகம் குழம்பிப்போனது. அதாவது சிங்கப்பூர், மலேசியாவில் பன்றிகள் மூலம் இந்த நோய் பரவியதால் மக்கள் இறந்தனர். இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் பன்றி வளர்ப்பவர்கள். அடுத்து மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, வங்காளதேசம் நாடுகளில் இதே நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதால் இறந்தனர். இது எப்படி என்று குழம்பிய மருத்துவ ஆய்வாளர்கள் பன்றி மூலம் மனிதர்களுக்கு இந்த நிபா வைரஸ் பரவுகிறது என்பதை உறுதி செய்தனர். இருந்தாலும் பன்றிகளும், மனிதர்களும் இந்த நோயின் ஆரம்ப இடம் கிடையாது, எங்கிருந்து பரவுகிறது என்று குழம்பி போயிருந்தனர். அப்போது கம்போடியா, தாய்லாந்து, மடகாஸ்கர் நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நிபா வைரஸ் உருவாக்குவது பழம் தின்னும் வௌவால்கள் தான் என்பதை வெற்றிகரமாக கண்டுபிடித்தனர். சரி இந்த நோய் ஏன் வௌவால்கள் ஏற்படுத்துகிறது. 

 

 

எல்லா பத்திரிக்கைகளும் எழுதுவது போல பேசாமல் வௌவால்கள் மீது பழியை போட்டு விடவேண்டியது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வழக்கம் போல இன்று உலகில் புதிய புதிய நோய்கள் உருவாக உயிரினங்கள் காரணமில்லை. மனிதன் மட்டுமே காரணம். இந்த சுயநல மனிதன் இந்த நோய்க்கு கூட காரணம்தான். இந்த நோய் பரவிய இடங்களில் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. இயற்கை சூழல் வேகமாக அழிக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்டிருந்தன. அப்படிதான் இந்த நோய் பரவிய இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டன. பழம் தின்னி வௌவால்களின் உணவான பழ மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பொதுவாகவே உயிரின சூழலில் பசியும் மனவருத்தமும் நோயை உண்டு பண்ணும். குறிப்பாக ஆர்.என்.ஏ (RNA) வைரஸ்களின் தொற்று ஏற்பட்டு நோய் உருவாகும். அப்படிதான் பசியாலும் மனவருத்தத்தாலும், என்னது வௌவால்களுக்கு மனவருத்தமா என்றால் ஆம் அனைத்து விலங்குகளுக்கும் மனவருத்தம் ஏற்படும். அதுவும் பறக்கும் பாலூட்டியான வௌவால்களுக்கும் மனவருத்தம் உண்டு. இதனால் ஆர்.என்.ஏ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது. பாரமிக்ஸோவைரைடு (Paramyxoviridae) குடும்பத்தை சேர்ந்த இந்த ஆர்.என்.ஏ வைரஸ், கெண்ட்ரா வைரஸ் (Hendra Virus)  வகையை சேர்ந்தது. இந்த வகை வைரஸ் பழம் தின்னி வௌவால்களின் உடலில் இயற்கையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த வௌவால்கள் எப்போது பலவீனமாக இருக்கிறதோ அப்போது இந்த வைரஸ் அதிகளவில் இந்த வௌவால்களிடம் காணப்படும். பழம் தின்னி வௌவால்களின் எச்சில், கழிவுகள், வாய் மற்றும் உடல் முழுதும் இந்த ஆர்.என்.ஏ வைரஸ் பரவியிருக்கும். இதோடு பழ வெளவாலின் பறக்கும் நரி, குறுவௌவால் என பல இனங்களிலும் இந்த வைரஸ் காணப்படுகின்றது. குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஆர்.என்.ஏ வைரஸ் தொற்றுக்கு இந்த வௌவால்கள் அதிகளவில் பாதிக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மாதங்களில் அதுவும் மே மாதத்தில் இளம் வௌவால்கள் அதிக அளவில் பறக்க துவங்கும். இதே காலக்கட்டத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பனைகள்ளு, ஈச்சங்கள்ளு மரங்களிலிருந்து எடுக்கப்படும். உயரமான மரங்களில் இருக்கும் இந்த கள்ளுக்கு மனிதர்களை போல வௌவால்களுக்கு ஈர்ப்பு அதிகம். இந்த கள்ளு மரங்களில் வௌவால்களின் எச்சங்கள் பரவி அதை குடிக்கும் மனிதர்களுக்கும் நிபா வைரஸ் நோய் ஏற்படுகிறது. இதனால்தான் பனை கள்ளும், ஈச்சங்கள்ளும் இறக்கும் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் நோய் பரவியது குறிப்பிடத்தக்கது. 

நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் பொதுவாக லேசான காய்ச்சலுடன் தலைவலி, உடல் வலி, மனச்சோர்வு ஏற்படுகிறது. பின்னர் இந்த நோயளிகள் மூன்று முக்கிய விதமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். முதலில் கெண்ட்ரா வைரஸ் போல் சுவாசப் பிரச்சினையை உருவாக்கி மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக மூளையை தாக்குவதால் மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான மூளைக்காய்ச்சல் உருவாகிறது. மூன்றாவதாக நரம்பு மண்டலத்தை பாதித்து கோமாவை ஏற்படுத்துகிறது. கோமாவுக்கு சென்றவர்களுக்கு இறுதியில் மரணம் ஏற்படுகிறது. 

இந்த நோய்க்கு தற்போது வரை சரியான மருந்துகள் இல்லை. இப்போதைக்கு ரிபாவைரின் (Ribavirin) மருந்தைதான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. வைரஸ் காய்ச்சலுக்கான இந்த மருந்து மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த நோயினால் ஏற்படும் குமட்டல், வாந்தி, வலிப்பு போன்றவற்றையும் மட்டுப்படுத்தலாம். சிகிச்சை முக்கிய நோக்கமாக காய்ச்சல் கட்டுப்படுத்தி நரம்பியல் பிரச்சினையை சரி செய்தால் மரணத்திலிருந்து காப்பாற்றலாம். சத்தான ஆகாரமும் நீர்சத்தும் நல்ல காற்றோட்டமும் இந்த நோயளிக்கு மிக முக்கியம். நிபா வைரஸ் காய்ச்சல் உடைய நோயாளிகள் கட்டாயம் பன்றி காய்ச்சல் போன்று தனி அறையில் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் தும்மல், இருமல், எச்சில் போன்றவைகள் மூலம் சக மனிதனுக்கு இந்த நோய் பரவும். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கட்டாயம் விலகி இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் இருமல், சளி, எச்சில், இரத்தம் போன்றவை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பன்றி வளர்ப்போர், பழங்கள் சாப்பிடும்போது பொதுவாக வௌவால்கள் படாதவையாக இருக்க வேண்டும். பனை, தென்னை, ஈச்சங்கள்ளு குடிப்பதை தவிர்ப்பது மிக மிக முக்கியம். கள்ளு தான் பழ வெளவால்கள் நிபா வைரஸை மனிதனுக்கு சேர்க்குமிடம். ஆக இப்போதைக்கு கள்ளு விற்பனையை கடுமையாக கட்டுப்படுத்துவது நல்லது. அதேபோல இந்த வைரஸ் காய்ச்சலும் நிச்சயம் ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்து போகும்.  

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.