Skip to main content

தமிழ்நாடனுக்கு பாரதிதாசன் விருது

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை 2018-க்கான விருதுகளில் ’நக்கீரன்’ இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் ‘இனிய உதயம்’ இதழின் இணை ஆசிரியருமான  ஆரூர் தமிழ்நாடனுக்கு ‘புரட்சிகவிஞர் பாரதிதாசன் நினைவு விருது’ வழங்கி சிறப்பித்திருக்கிறது. மேலும் பல்வேறு படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடனை வாழ்த்தி இயக்குநர் பிருந்தாசாரதி வெளியிட்ட வாழ்த்துசெய்தி இது;

 

tt
ஆரூர் தமிழ்நாடன்

 



பாரதிதாசன் விருது பெறும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கு வாழ்த்து. கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களை வாழ்க்கையில் மிகத் தாமதமாகவே சந்தித்தேன். கவிஞர் ஜெயபாஸ்கரன் மூலம் அறிமுகமானார். இரண்டு மூன்று வருடப் பழக்கம்தான். ஆனால் இரண்டு மூன்று ஜென்மகளுக்கான அன்பைப் பொழிந்துவிட்டார். நாள்தோறும் முகநூலில் அவர் எழுதிவரும் கவிதைகளை வாசித்துவருகிறேன். அற்புதமான கற்பனைகள், வளமான சொல்லாட்சி, திட்டவட்டமான திராவிட இயக்கச் சித்தாந்த அணுகுமுறை என அவற்றில் தன் முத்திரையைப் பதித்து வருகிறார்.  மரபுக் கவிதைகளைப் படித்துவிட்டு இவர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர் எனக் கருதிக் கொண்டிருக்கும்போது தத்துவ ஆலாபனை செய்யும் புதுக்கவிதைகளால் கவிக்கோவின் வழித்தோன்றலோ என எண்ணவைப்பார். 

 


சங்க காலம் முதல் புதுக்கவிதைக் காலம் வரை தமிழ்க் கவிதைகளின் பரவலாக அறியப்பட்ட பகுதிகளை மட்டுமல்ல அதன் மூலைமுடுக்கெல்லாம் அறிந்தவர். ஆனால் அந்தக் கல்வியின் செருக்கு சிறிதும் இல்லாதவர். வளரும் எழுத்தாளர்களுக்குத் தேடிச் சென்று உதவுபவர். திறமைகளைத் தேடி ஊக்குவிக்கும் அவரது இந்தப் பண்புக்கு இனிய உதயத்தின் பக்கங்கள் சாட்சி சொல்லும். கவிதையின் சாயலின்றி உரைநடை எழுதுவார். கதை, கட்டுரை என வெளுத்து வாங்கும் இவருக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது எனப் பல சமயங்களில் வியந்திருக்கிறேன். எந்தத் தலைப்பிலும் நொடியில் பேசவும் எழுதவும் முடியும் இவரால். நலம் விசாரிக்க அலைபேசியில் அழைக்கும்போது நேரம்போவதறியாமல் உரையாடிக்கொண்டிருப்பேன் அவரோடு.  இந்தப் பிறந்த நாளில் அவரிடம் எனக்கொரு கோரிக்கையுண்டு. எழுதிய கவிதைகளைத் தொகுத்து இவ்வாண்டில் நூல்கள் வெளியிடவேண்டும்.

 


மரபு ஒன்று, குறுங்கவிதை ஒன்று, நெடுங்கவிதை ஒன்று, காலநதி என்ற தலைப்பில் அவர் எழுதிய (தத்துவ) வசன கவிதை ஒன்று , இன்னும் எனக்குத் தெரியாமல் அவரிடம் பதுக்கிக் கிடக்கும் புதையல்கள் அனைத்தும் நூலாக்கம் பெறவேண்டும்." என்று கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளில் அவரை வாழ்த்திப் பதிவிட்டிருந்தேன். இவ்வாண்டுப் புத்தகக் கண்காட்சியில் அவரது  'காலநதி' கட்டுரைகள் மற்றும் 'காற்றின் புழுக்கம் ' என்ற மரபுக் கவிதைத் தொகுதி வெளிவந்துவிட்டன. சூரியனைப் பாடுகிறேன்' என்ற கலைஞர் வெண்பா நூலும் மறுபதிப்பு வந்துள்ளது. என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. (மற்ற நூல்களும் விரைவில் வரவேண்டும்.)
இன்று தேனியில் அவருக்கு 'தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை' அமைப்பு, பாரதிதாசன் விருது தருகிறது. ஏற்கெனவே தமிழக அரசால் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டில் பரிசு பெற்றவர்தான் ஆரூர் தமிழ்நாடன். பல்வேறு பரிசுகளைப் பெற்றிருந்தாலும் இன்று மீண்டும் பாரதிதாசன் பெயரில் ஒரு விருது பெறும் அவரை மனதார வாழ்த்துகிறேன். நான் மிகவும் ரசிக்கும் அவரது அற்புதமான கவிதை ஒன்று:

 

காலத்தை அளப்பேன்:


*
என்னூர் என்பது உலகப் பெருவெளி
என்னுற வென்பது மானுடக் கூட்டம்
என்மகிழ் வென்பது உலகின் மகிழ்வு
என்துய ரென்பது பிறர்படும் துயரம்

*
என்கன வென்பது பசியறு உலகம்
என்சுக மென்பது சூதறு மனிதம்
என்னிசை என்பது இயற்கையின் பாடல்
எந்தவ மென்பது வியர்வையின் வெகுமதி

*
இரவும் பகலும் என்னிரு கைகள்
வரவும் செலவும் வாழ்வின் சுவாசம்
சிறகுகள் இருப்பது சிகரங்கள் அளக்க
உறவுகள் இருப்பது உயிர்வரை சேர்க்க

*
பறவைகள் இசைக்குப் பாடல்கள் புனைவேன்
கறையிலாப் பொழுதால் காலத்தை அளப்பேன்
உறக்கத்தில் கூட உயிர்ப்பாய் இமைப்பேன்
திறவாத் திசையிலும் பூக்கள் வளர்ப்பேன்.
*

ஆரூர் தமிழ்நாடன்


பாரதிதாசன் விருதுக்குப் பொருத்தமானவர் ஆரூர் தமிழ்நாடன் என்பது தெரிகிறதா?

 

 

 

 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் குறித்து ஆளுநர் தமிழிசை கருத்து

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

tamilisai talks about karnataka bjp meeting tamil state song stopped issue

 

பாவேந்தர் பாரதிதாசனின் 133வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குத் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133வது பிறந்தநாளில் அவரை வணங்குவதில் பெருமை கொள்கிறேன். புதுச்சேரியில் இன்று (29.04.2023) மாலை பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா உள்ளது. புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாரதிதாசன் உடையது தான். புதுச்சேரியோடு பாரதிதாசனும், பாரதியாரும் ஒன்றிணைந்தவர்கள். அதனால் மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நாளைய தினம் (30.04.2023) பிரதமரின் மனதின் குரல் 100வது நிகழ்வு ஒளிபரப்பப்படுகிறது. நாளை காலை தெலுங்கானாவிலும், மாலையில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் புதுச்சேரியிலும் கொண்ட இருக்கிறோம். மனதின் குரல் நிகழ்ச்சி மிகப்பெரிய சமுதாய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் மனதின் குரலைக் கேட்க வேண்டும். இது அரசியல் கலவாத சமுதாய நிகழ்ச்சி.

 

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரச் சலுகை வரவேற்பு  நன்றாகத் தான் இருக்கிறது. எதிர்க் கட்சிகளிடம் இருந்து வரவேற்பு இருக்காது என்று தெரியும். எதிர்க்கட்சி தலைவர் சிவா இதனைப் பெண் அடிமைத் தனம் என்று குறிக்கிறார். இது எப்படி என்று தெரியவில்லை என்னைப் பொறுத்தவரைப் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். கடுமையாக பணியாற்றும் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்த சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன். கலைஞருக்குப் பேனா சிலை வைப்பதற்குச் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து இருக்கிறார்கள். பேணா சிலை வைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் இது அவருக்கே  ஒத்துக்கொள்ளாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தான் அனுமதி கொடுக்கப்பட்டது இருக்கிறது" என்றார்.

 

கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது தமிழ்த் தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்" என்றார். டெல்லியில் மல்யுத்த  வீராங்கனைகளின்  பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு, "பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்து எல்லா அரசு உறுதி செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு நிச்சயமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.