Skip to main content

கொலையுண்ட மகனை உயிர்ப்பித்த சிவன்; ‘குஷ்மேஷ்வர் ஜோதி லிங்கம்’ சிவாலயத்தின் கதை

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

குஸ்மேஷ்வர் நாத் மந்திர் என்பதொரு சிவாலயம். இந்த ஆலயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஹேலா என்னுமிடத்தில் பிரதாப்காட் மாவட்டத்தில் இருக்கிறது. ‌வேத காலத்தில் கூறப்படும் "ஸை' என்னும் நதியின் கரையில் ஆலயம் உள்ளது. குட்ஸார்நாத் மந்திர் என்ற பெயரிலும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. சிவபுராணத்தில் இந்த கோவிலைப் பற்றிய கதை உள்ளது.

 

பரத்வாஜ வம்சத்தைச் சேர்ந்தவர் சுதர்மா. ஆற்றின் கரையில் இவரது வீடு இருந்தது. இவர் சிவபக்தர். எப்போதும் சிவனை வழிபட்டுக் கொண்டேயிருப்பார். இவருடைய மனைவியின் பெயர் சுதேஹா. வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்கும் அவள் தன் கணவருக்கு சேவை செய்வதிலும் மிகுந்த அக்கறையுடன் இருந்தாள்.

 

சுதர்மா அனைவரையும் மதிப்பார். தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பார். தினமும் "அக்னிஹோத்ரம்' என்னும் சடங்கைச் செய்வார். மூன்று நேரங்களிலும் பூஜையில் ஈடுபடுவார். சூரியனைப் போல் அனைவரையும் அவர் ஈர்ப்பார். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் பின்பற்றி நடப்பார். அவர் தன் சீடர்களுக்கு வேதத்தைக் கற்றுத்தந்தார். வசதி படைத்தவராகவும் தர்மப்பிரபுவாகவும் இருந்த அவர் நல்ல மனம் கொண்டவராகவும் இருந்தார்.

 

எனினும் அவருக்கு வாரிசில்லை.அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஆனால் அவரது மனைவி கவலைப்பட்டாள். தனியாக அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதாள். குழந்தையில்லாத அவர்களை கேலியும் கிண்டலுமாக பலரும் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து தன் தங்கையை இரண்டாவது மனைவியாக கணவருக்கு திருமணம் செய்துவைக்க அவள் தீர்மானித்தாள். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ள சுதர்மா மறுத்தார். அவள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்க, இறுதியில் அவர் சம்மதித்தார். அக்காவின் விருப்பத்திற்கு தங்கையும் ஒப்புக்கொண்டாள்.

 

அவளது தங்கைக்கும் கணவருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் மூவரும் தினமும் 100 சிவலிங்கங்களை களிமண்ணில் செய்து, அவற்றை அருகிலிருக்கும் குளத்தில் கொண்டுபோய் போடுவார்கள். இதையொரு சடங்காகவே அவர்கள் செய்து வந்தார்கள். தங்கை குஸ்மாவுக்கு சிவபெருமானின் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அதற்காக சந்தோஷப்பட்ட அக்கா சுதேஹா காலப்போக்கில் தன் தங்கையின் மீது பொறாமை கொண்டாள்.

 

சிறுவன் வளர்ந்து வாலிபப்பருவம் எய்தினான். அவனுக்கு திருமணம் நடந்தது. மணப்பெண் வீட்டிற்கு வந்ததும் அவளைப் பார்த்து சுதேஹா எரிச்சலடைந்தாள். ஒருநாள் யாருமில்லாத நேரத்தில் தன் தங்கையின் மகனை சுதேஹா பல துண்டுகளாக வெட்டி, ஆற்றில் கொண்டுபோய் போட்டாள்.  இப்படிப்பட்ட கொடூரச் செயலைச் செய்து விட்டு எதுவுமே தெரியாததைப் போல அவள் இருந்தாள்.

 

புதிதாக வந்த மணப்பெண் மறுநாள் கண்விழிக்கும்போது தன் கணவன் இல்லாததைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதறினாள். வீட்டில் சில இடங்களில் குருதிக்கறை இருப்பதை அவள் பார்த்தாள். எனினும் அதற்குப் பின்னணியில் நடந்திருக்கும் சதியை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் எதுவுமே நடக்காததைப் போல தினமும் சிவனுக்கு பூஜை செய்துகொண்டே இருந்தார் சுதர்மா. பூஜையில் கணவருக்கு உதவியாக இருந்தாள் குஸ்மா.

 

தன் மகன் படுத்திருந்த கட்டிலையே கவலையுடன் சுதர்மா பார்த்தார். தனக்கு குழந்தையை அளித்த சிவபெருமான் நிச்சயம் தனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். தான் எப்போதும் செய்யக்கூடிய 100 மண் சிவலிங்கங்களை நீரில் போடுவதற்காக அவர் சென்றார்.

 

அப்போது அங்கு கரையில் தன் மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. அனைத்துமே சிவனின் திருவிளையாடல்கள் என்று எண்ணிக்கொண்டார். அவருடன் குஸ்மாவும் அப்போதிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சிவபெருமான் ஜோதி வடிவத்தில் தோன்றி, "கொடூரச் செயலைச் செய்த சுதேஹாவை நான் வதம் செய்யட்டுமா?'' எனக் கேட்க, "வேண்டாம்'' எனக் கூறினாள் குஸ்மா.

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

மேலும், ஜோதி வடிவத்தில் சிவன் தோன்றிய இடத்திலேயே நிரந்தரமாக இருந்து மக்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க வேண்டுமென அவள் சிவனைக் கேட்டுக்கொண்டாள். அதற்கு சிவன் சம்மதித்தார். அந்த இடத்தில் தான் இப்போதைய ஆலயம் இருக்கிறது.

 

குஸ்மா கேட்ட வரத்தின்படி அமைந்த கோவில் என்பதால் அவளின் பெயரும் ஆலயத்தின் பெயருடன் சேர்ந்துகொண்டது. இதுதான் "குஸ்மேஷ்வர்நாத் மந்திர்' என்ற சிவாலயத்தின் கதை. இந்த ஆலயத்திற்கு வந்து நீராடிவிட்டு சிவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து பிரச்சினைகளும் தீருமென்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தைத் தேடி உலகமெங்குமுள்ள சிவபக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். அலஹாபாத் நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம்.

 

 

 

 

Next Story

சிவன் அருள் பெற ஏழு வகையான அபிஷேகங்கள்!

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 To obtain the grace of Shiva; Seven types of Abhishek!

 

பக்தி, அன்பு, பாசம் என்பதெல்லாம் என்ன? இவையெல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதா? பொருள் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சரி; பொருள் என்றால் என்ன? அது வாங்கக்கூடிய பொருளல்ல. அது சகலத்தையும் செய்யும்; சகலத்திற்கும் உயிரூட்டும்; சகலத்தையும் அழிக்கும்; சகலத்தையும் காத்தருளும். அது தான் அண்ட பேரண்டத்தையும் மறைபொருளாக இருந்து ஆட்சிசெய்யும் பரம்பொருள். ஆம்; பரம்பொருளே பரமசிவம். நாம் சதா சிவம் என்றிருந்தால் அது "அன்பே சிவம்' என்பதை அறியவைக்கும். அதையறிய எது வேண்டும்? ஆரோக்கியம் வேண்டும். ஆரோக்கியம் பெற எது வேண்டும்? பக்தி செய்யவேண்டும். ஒரு கோவிலிலுள்ள மூலஸ்தானத்தில் மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்.

 

1.முதலிலில் தூய்மையான தண்ணீரில் கழுவி பின்னர் மஞ்சள் அபிஷேகம்,

2.வாசனைத் திரவிய அபிஷேகம்,

3.சந்தன அபிஷேகம்,

4.இளநீர் அபிஷேகம்,

5.விபூதி அபிஷேகம்,

6.பன்னீர் அபிஷேகம்,

7.சொர்ண அபிஷேகம்  

இவ்வாறான அபிஷேகங்களை வரிசையாக முடித்து வண்ண மலர்களால் அலங்கரித்து, அர்ச்சர்கள் சிவபெருமானை வழிபடுவார்கள். பக்தர்கள் மனமும் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து எல்லையில்லா ஆனந்தத்தில் திளைப்பர். இத்தகைய அபிஷேகத்தைப் பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர்...

"எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை

எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்

எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்

எய்தி வழிப்படில் எய்திடும் முக்தியே'

என்கிறார். அதாவது, வாச மலரிட்டு, வண்ணக் கலவைகள் சாற்றி, அமுதுபடைத்து, அன்பு கொண்டு தீபதூபம் காட்டி வழிபாடு செய்தால் அடைய முடியாதது ஒன்றுமில்லை. இந்த முறையில் நின்று வழிபாடு செய்பவர் இந்திரலோகச் செல்வம் அடையப் பெறுவர். அவர்களுக்கு எட்டுவகை சித்திகளும் கைகூடும். எல்லாவற்றிற்கும் மேலாக இம்முறையில் வழிபடுவோர் முக்தியின்பமும் சித்திக்கப் பெறுவர் என்கிறார்.

 

இப்படி அர்ச்சனை செய்வதும், அபிஷேகம் செய்வதும் மிக உயரிய விஷயமாகும். இதனால் மூலவரின் ஆதிமூலமான பரம்பொருள் ஆற்றல் பேரானந்தம் அடைகிறது. எவ்வித எதிர்பார்ப்புமில்லாத எம்பெருமான் ஈஸ்வரன் அடியார்களுக்கு அளவற்ற அருளாசியை வழங்கி ஆனந்தப் படுத்துகிறார். மூலவருக்கான அபிஷேக ஆராதனையை எப்படிச் செய்யலாம் என்பதை உடல் இயக்கவியலிலின் மேதை திருமூலர்-

"வரைத்து வலம்செய்யுமாறு இங்கு ஒன்றுண்டு

நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி

உரைத்து அவன்நாம் உணர வல்லார்க்குப்

புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே'

என்று பாடுகிறார். அதாவது விண்ணும் மண்ணும் அளக்க, எங்கும் விரிந்து பரந்து நிறைந்திருக்கிற பரம்பொருளை ஒன்றில் எழுந்தருளச் செய்து வழிபடும்முறை ஒன்று இங்குள்ளது. அதுவே சிவலிங்க வழிபாடாகும். பொங்கிப் பெருகிவரும் கங்கை நீரையும், வாசமலர்களையும் கைகளில் ஏந்தி, ஐந்தெழுத்து மந்திரத்தை (நமசிவய) ஓதி வழிபடவேண்டும். இப்படிப் பரம்பொருளை உள்ளத்தால் உணர்ந்து வழிபடுவோரின் உள்ளத்தைவிட்டு வள்ளல்பெருமான் வெளியே போகமாட்டான். அவர்களின் உள்ளத்திலேயே இருப்பான் என்று கூறுகிறார்.

 

எனவே இதுபோன்ற வழிபாடுகளால் சிவப்பரம்பொருளை நம் உள்ளத்தோடும், உணர்வோடும் ஒன்றியிருக்கச் செய்ய, இறைவன் அருளிய இவ்வுடலெனும் கூடு ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உடலின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிற அக, புற (உள், வெளி) உறுப்புகள் அனைத்தும் உறுதியாகவும், நல்லுணர்வோடும் இயங்கிட "ஆசன அபிஷேகம்' செய்யவேண்டும். உடலில் உச்சிமுதல் பாதம்வரையுள்ள உறுப்புகளில் மூளையானது திறம்பட செயல்படவேண்டும். அதற்கு மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) அவசியம். அதேபோல மூளையானது அபரிமிதமான செயல்திறனோடும், அளப்பரிய நினைவாற்றலோடும் செயல்பட நாம் "பர்வதாசனம்' பழகவேண்டும். இப்பயிற்சியானது தலைப்பகுதியிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகும். ஆசனங்களின் அரசன் என்று சொல்லப்படும் சிரசாசனத்திற்கு நிகரானதாகும். அடுத்தது "தாடாசனம்' பழகவேண்டும். இது ரத்த அழுத்தத்தைப் போக்கி இதய செயல்பாட்டை சமன்படுத்துகிறது. அடுத்து "தாளாசனம்' பழகவேண்டும். இது தோள் மூட்டுகளுக்கும், விலா எலும்புகளுக்குமான ஆசனமாகும். இது நீரிழிவைத் தடுக்கிறது.

 

பின்பு "விருக்ஷாசனம்' பழகவேண்டும். இது இடுப்பெலும்பு, முழங்கால் மூட்டுகள், கணுக்கால் மூட்டுகளுக்கு மிகுந்த வலிமையையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. அடுத்து "பரிவர்த்தன திரிகோணாசனம்' பழகவேண்டும். இது நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் ஆசனமாகும். வலிப்பு நோய் தடுக்கப்படுகிறது. அடுத்தது "உத்தானாசனம்', "யோக முத்ரா, "பஸ்சிமோத்தாசனம்' பழகவேண்டும்.

 

இவ்வகை ஆசனங்கள், ஒருங்கிணைந்த சக்கரங்களின் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை அபரிமிதமாகத் தூண்டி ஆரோக்கியமான உடலியக்கத்திற்குத் துணைபுரிகின்றன. எனவே இதுபோன்று நாம் செய்யும் ஒவ்வொரு ஆசனமும் உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கும், உடலுறுதிக்கும், மனஉறுதிக்கும், மன அமைதிக்கும் உதவிகரமாக இருக்கின்றன. இவ்வாறு நாம் செய்யும் ஆசனங்களெல்லாம் நம் உடலின் உள், வெளி உறுப்புகளுக்குச் செய்யும் அபிஷேகமாகும். அது வெறும் அபிஷேக மல்ல; உன்னதமான யோகாபிஷேகமாகும். அதன் விளைவாக இறைவன் சிவபெருமானின் உன்னத நிலையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளமுடியும். சரியை, கிரியை, யோகம் என்று வகைப்படுத்துகிறார் திருமூலர். சரியை என்பது உருவத்தைப் பார்த்து வழிபடுவது; கிரியை என்பது உருவத்தை அலங்கரித்து வழிபடுவது என்று பொருளாகும். இந்த இரண்டு செயல்களால் நமது உடலெனும் கூட்டிற்கு "வீடுபேறு' கிடைக்காது. எனவே நாம் ஒவ்வொருவரும் யோகம் எனும் "யோகாபிஷேகம்' செய்வோம்.வீடுபேற்றைப் பற்றி சங்க காலப் புலவர் ஔவையார்-

"பற்றற்று நின்ற பரம்பொருளை சிந்திக்கில்

முற்றும் அழியாது உடம்பு'

என்கிறார்.

 

விருப்பு, வெறுப்பு இல்லாதிருக்கிற இறைவனை மனதில் உள்ளன்போடு இருத்தித் தியானம் (யோகத்தில் அடங்கியதே) செய்தல் வேண்டும். அப்படிச் செய்பவர்களின் உடல் அழியவே அழியாது. இவ்வாறாக ஒருவரின் மனமானது சதாசிவம் எனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபடவேண்டுமெனில், நாம் ஒவ்வொருவரும் யோகாபிஷேகம் செய்வோம். யோகத் தந்தையும், தாயுமானவருமான சிவபெருமானின் அன்பைப் பெற்று, ஆரோக்கிய ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.

 

- யோகி சிவானந்தம்

 

 

Next Story

பெரிய குறைகளை அகற்றும் சிறிய பிரமிடுகள்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

 Small pyramids that eliminate large defects 

 

பிரமிடுகள் பற்றிய பல செய்திகளை நாம் படித்திருக்கிறோம். அவை வாஸ்து குறைகளை எப்படி அகற்றுகின்றன என்பதை சுருக்கமாக இங்கு காண்போம்.

 

பிரமிடுகள் உலோகம், கண்ணாடி, மரம், பிளாஸ்டிக் போன்றவற்றால் பல அளவுகளிலும் வடிவங்களிலும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும் புண்ணிய தேச மணல், மண், கல், புல்லுருவி இலைச் சாறு, மூலிகைச்சாறு, கடல் சிப்பியில் எடுக்கப்பட்ட சுண்ணாம்புப் பொடி ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமிடுகள் மிகச்சிறந்தனவாகும்; மிக வேகமான நற்பலன் தருவனவாகும்.

 

உலோகம் என்றால் மின்சாரத்தை உட்கொள்ளும் சக்தியுடையது. அதைவிட மின் அதிர்வுகளை உள்வாங்காத பிரமிடுகளே அதிக பலன் தரும் எனலாம். எட்டுத்திக்கிலும் அதிக நன்மைகளை உருவாக்கித் தரும் அஷ்டமோஹனப் பிரமிடுகளை - எட்டுத் திக்குகளில் அவை இருக்கவேண்டிய இடங்களில் வைத்துக்கொண்டால் அதிக நன்மைகளைப் பெறலாம்.

 

வடதுருவ - தென்துருவ காந்த ஈர்ப்பு சக்தியிலிருந்து இருப்பிடத்தையும் கட்டடங்களையும் வாஸ்து ரீதியாக காப்பாற்றவே பிரமிடுகள் உபயோகிக்கப்படுகின்றன. எல்லா வாஸ்து தீமைகளுக்கும் கட்டடங்களை இடித்து மாற்றுவது இயலாது. குறிப்பாக, அடுக்குமாடி கட்டடங்களில் அது இயலாத காரியம். எனவே, சிறிய பிரமிடுகளைக் கொண்டு அதை நிவர்த்தி செய்யலாம்.

 

நல்ல நிறங்கள் கொண்ட பிரமிடுகள் மிகச்சிறந்தவை. அவற்றை இருக்க வேண்டிய இடத்தில் வைத்துக்கொண்டால் தேவையற்ற கவலைகள் படிப்படியாக மறையும். இவை இன்ஸ்டன்ட் காப்பி போன்றதல்ல, உடனேயே பருகுவதற்கு. பிரமிடுகள் மெல்ல மெல்ல நன்மைகளுக்குத் துணை வருவதை உணரலாம்.

 

நான்கு பக்கங்கள் கொண்ட பிரமிட் எல்லாவற்றுக்கும் பொதுவானது. ஐந்து பக்கமும் உச்சி முனையும் கொண்டவற்றை வீட்டின் பிரம்ம பாகத்தில் (மையத்தில்) இருக்கச் செய்தால், பஞ்சபூத கெடுதிகள் நம்மை அண்டவிடாமல் பாதுகாத்து, தீமைகளை அவை உள்வாங்கிக் கொள்ளும். ஆறு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள திசைகளைச் சீர்செய்து, நோய் நொடி வராமல் தடுக்கும். வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு, உத்தியோகச் சிக்கல் போன்ற இன்னல்களை அகற்றி பாதுகாப்பு தரும்.

 

ஏழு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், தடைப்பட்ட திருமணங்களை விரைவில் நடைபெறச் செய்யும். அன்பு சார்ந்த; காதல் சார்ந்த வேதனைகளை இந்த பிரமிட் போக்கும். எட்டு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், அட்ட திக்குகளில் இருந்து ஏற்படும் எல்லா தீய சக்திகளையும் உள்வாங்கி, அது இருக்குமிடத்தில் எந்தக் கெடுதல்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் வல்லமை படைத்தது. வீட்டின் மாடியிலோ அல்லது கட்டடத்தின் உயரமான பாகத்திலோ இருக்கச் செய்தால் எல்லா இடர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிவிடும். வெண்மை நிறம்தான் இதற்குச் சிறந்தது.

 

ஒன்பது பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிடை கல்விக் கூடங்கள், பயிற்சி தரும் இடங்கள், தியானம், யோகா போன்ற ஆத்மசாதனை புரியும் இடங்களில் வைத்துக்கொண்டால், தங்கு தடையின்றி எல்லா காரியங்களையும் முயற்சிகளையும் வெற்றி பெறச்செய்யும். மஞ்சள் வண்ணம் ஏற்றது.

 

கிழக்கு பாகத்திற்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட பிரமிட் சிறந்தது. ரோஸ்வுட், கருந்தேக்கு, கடம்பு, ஒய்ட் சிடால் மரங்கள் ஏற்புடையவை. தென்கிழக்கில் செம்பிலான சிறிய பிரமிட் அல்லது சுத்த வெண்மைநிற பிரமிடை சற்று உயரமான இடத்தில் வைத்துக்கொண்டால், மனவேறுபாடுடைய தம்பதிகள் கூட வெறுப்புணர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வாழ்வார்கள். அந்த இடத்தில் சமையல் கூடம் இருந்தால் உணவுக்குரிய தானியங்கள் எப்போதும் வேண்டிய அளவு இருந்து கொண்டேயிருக்கும். தெற்கு பாகத்தில் சிவப்புநிற மர பிரமிட் ஒன்பது இஞ்ச் அளவில் இருப்பது சிறப்பானது. 18 இஞ்ச் அளவில் பெரிய பிரமிட் இருப்பது மிக நல்லது. அது கருஞ்சிவப்பாக இருந்தால் மிகவும் நல்லது. உயரிய பலனைப் பெற்றுத்தரும்.

 

தென்மேற்கில் பிளாஸ்டிக் பிரமிட் இருந்தாலும் பாதகமில்லை. இதன் முனையை வடக்கு- தெற்காக வைத்துக்கொண்டால் அதிவேகமான செயல்திறனைப் பெற்றுத்தரும். மேற்கு பகுதியில் மூன்று இஞ்ச்சில் செம்பினாலான பிரமிட் அல்லது பிரவுன் கலர் பிரமிட் இருப்பது நன்மைகளைத் தரும். அதைவிட மேற்கை ஆளும் சனி பகவானுக்குரிய நீலநிற பிரமிட் சாலச்சிறந்தது.

 

வடக்கு பாகத்தில் தங்கநிற ஆறு இஞ்ச் பிரமிட் வைத்துக்கொள்வதால் நன்மைகளைப் பெறலாம். வடக்கு சுவரின் பக்கத்தில்தான் வைக்க வேண்டும். வடமேற்கில் 12 இஞ்ச் அளவில் வெள்ளி பிரமிட் அல்லது வெள்ளிநிற பிரமிட் வைப்பது மிகச்சிறப்பானது. இதனை கப்போர்ட் போன்ற இருட்டான இடத்தில் வைப்பது கூடாது. வடகிழக்கு பகுதியில் கெடுதலுக்குரிய பிரமிட் அமைந்துவிட்டால் அதிகமான குறைகளைத்தான் சந்திக்க நேரிடும். எனவே, இங்கு ஒரு சிறு புது மண்குடுவையில் நீரை நிரப்பி வைத்துக்கொண்டாலே போதும். இங்கு வைக்க புண்ணிய தேச மணலில் உருவாக்கிய பிரமிட்தான் சிறப்பானது.

 

பிரமிடுகள் ஏன் வேண்டும்?
பிரமிடுகள் கி.மு. 332 முதல் 3,100 வரை மண்ணுலகில் முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளதாம். உலகில் பெரிய பிரமிட் மெக்சிகோவில் கிட்டதட்ட 45 ஏக்கரில் 117 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டதாம். எகிப்தில் 480 அடி உயர பிரமிட் 13 ஏக்கரில் உருவாக்கப்பட்டதாம். நம் பாரதத்தில் கோபுரக் கலசம் வைப்பதன் அடிப்படை, கோபுரங்களை இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்றத்தான். அந்த அடிப்படையிலேயே பிரமிடுகள் செயல்படுகின்றன. எனவே, சிறிய பிரமிடுகளால் அதிக நன்மைகளை நாம் பெற இயலும்.

 

--பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை