Skip to main content

குளமங்கலம் அய்யனார் கோயில் திருவிழா; காகிதப் பூ மாலைகள் கட்டும் பணிகள் தீவிரம்!

Published on 22/02/2025 | Edited on 22/02/2025

 

 garland making work full swing Kulamangalam Ayyanar Temple festival

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் ஆசியாவின் மிக உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் மாசிமகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 33 அடி உயரமான பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக அணிவிப்பது சிறப்பான நிகழ்வாக நடைபெறுவது வழக்கம்.  மாசிமகத் திருவிழா 2 நாட்கள் நடக்கும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும்.

கிராமத்தின் சார்பில் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து முதல் மாலையாக மலர் மாலை அணிவித்த பிறகு, மலர்கள், பழங்களால் கட்டப்பட்ட மாலைகளும் வாகனங்களில் ஏற்றி வந்து அணிவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மாலைகள் குதிரை சிலைக்கு அணிவிக்கப்படுவதால் அதனைக் காண பக்தர்களின் வருகை ஆயிரக்கணக்கில் இருக்கும். இதற்காக சிறப்பு பேருந்து வசதிகளும், மருத்துவ வசதி, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

 garland making work full swing Kulamangalam Ayyanar Temple festival

இந்த வருடம் மார்ச் 12 ந் தேதி புதன் கிழமை மாசிமகத் திருவிழா தொடங்க உள்ளது. மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை, திருநாளூர், வடகாடு, திருச்சிற்றம்பலம், பேராவூரணி, செருவாவிடுதி உள்பட பல கிராமங்களிலும் பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் கட்டும் பணிகள் கடந்த ஒரு மாதமாக தொடங்கி நடந்து வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மாலைகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மீறி பிளாஸ்டிக் மாலைகள் கொண்டு வந்தால் குதிரை சிலைக்கு அணிவிக்க அனுமதி இல்லை என்று கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால்  முழுமையாக வண்ண வண்ண காகிதங்களை மட்டுமே பயன்படுத்தி பிரமாண்ட மாலைகள் கட்டப்பட்டு வருகிறது.

 garland making work full swing Kulamangalam Ayyanar Temple festival

ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல மாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு குவிந்ததால் இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக இருக்கும் என்கின்றனர். குதிரை சிலைக்கு மாலை அணிவிக்க நேர்த்திக்கடன் வைத்துள்ள பக்தர்கள் இப்போதே மாலை கட்டுபவர்களிடம் முன் பதிவு செய்துள்ளனர். அதே போல மாலைகள் ஏற்றிச் செல்ல வாகனங்களும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

 garland making work full swing Kulamangalam Ayyanar Temple festival

இந்த ஆண்டு வண்ண காகிதங்களின் விலையும், மாலை கட்டும் தொழிலாளர்களின் சம்பளமும் உயர்ந்துள்ளது. மேலும், காகித மாலைகளை கட்டி பாதுகாப்பதற்கு தனி செட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு மாலையின் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்