Skip to main content

ரிக் தொழிலாளி அடித்து கொலை; உடலில் கல்லைக் கட்டி குட்டையில் வீசிச் சென்ற நண்பர்கள்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

youths who incident their friend and threw it in a puddle

 

திருச்செங்கோடு அருகே குடிபோதையில் நண்பன் என்றும் பாராமல் ரிக் தொழிலாளியை அடித்துக் கொன்ற 5 நண்பர்கள், உடலில் கல்லைக்கட்டி குட்டையில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மண்டகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜசேகர் (24). ரிக் லாரி தொழிலாளி. இவர், ஜூலை 2ம் தேதி இரவு, கிரிவலப்பாதையில் உள்ள மலார்குட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு ஆலமரத்தின் கீழே அவருடைய நண்பர்கள் 5 பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராஜசேகரைப் பார்த்த நண்பர்களுள் ஒருவரான விக்னேஷ் அவரையும் மது குடிக்க அழைத்தார். அங்கு சென்ற ராஜசேகர் அவர்களிடம்  சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.     

 

அப்போது ராஜசேகரை அவருடைய நண்பர்கள் நான்கு பேர் கை, கால்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டனர். விக்னேஷ், அங்கிருந்த கல்லை எடுத்து ராஜசேகர் தலை மீது போட்டு கொலை செய்துள்ளார். ஆத்திரம் தணியாத மற்ற நண்பர்களும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே ராஜசேகர் உயிரிழந்தார். ராஜசேகர் இறந்துவிட்டதை உறுதி செய்த கொலையாளிகள், அவருடைய உடலில் கல்லை கட்டி அந்தப் பகுதியில் உள்ள மலார் குட்டையில் சடலத்தை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.  

 

மறுநாள் காலையில் போதை தெளிந்த 5 பேரும் நண்பனை கொன்று விட்டோமே என வருந்தியதுடன், அனைவரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர், மலார் குட்டையில் கிடந்த ராஜசேகரின் சடலத்தை மீட்டனர். சடலத்தை உடற்கூராய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்நிலையத்தில் சரணடைந்த மலார்குட்டையைச் சேர்ந்த லிங்கப்பன் மகன் விக்னேஷ் (27), கோபால் மகன் பெரியசாமி (25), செல்வம் மகன்  தினேஷ்குமார் (25), முருகேசன் மகன் பூவரசன் (23), சண்முகம் மகன் பிரவீன் (23) ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  

 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூரில் பிள்ளையார் சிலை வைப்பது தொடர்பாக ராஜசேகருக்கும், விக்னேஷ் தரப்புக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டு நண்பன் என்றும் பாராமல் ராஜசேகரை கொலை செய்திருப்பதும், அவர்கள் அனைவருமே சிறு வயது முதலே நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது.  இதையடுத்து அவர்களை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலையாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.