Skip to main content

22 இல்லை 250 தலைவர்கள் ஒன்று கூடினாலும் முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
Vanathi Srinivasan



மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நடைப்பெற்ற கூட்டத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 22 பேர் பங்கேற்று பேசினர். 
 

மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று மம்தா பானர்ஜி பேசினார். 
 

பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினார்கள்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், 
 

இவர்களை ஒன்றிணைக்கக்கூடிய கோஷமாக மோடி எதிர்ப்பு கோஷம், பாஜக எதிர்ப்பு கோஷம் இன்று இருக்கலாம். ஆனால் இவர்களுடைய நம்பகத்தன்மைப் பற்றி, குடும்பக் கட்சிகளைப் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். இங்கிருந்துகூட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துவிட்டு மம்தா பானர்ஜி அழைத்தவுடன் அங்கு செல்கிறார் என்றால், இவர்களைப் பொறுத்தவரை மோடி எதிர்ப்பு என்பதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர, இந்த ஆட்சிக்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஒரு வலுவான ஆட்சியைத் தரக்கூடிய சிந்தனை என்பது இல்லை.
 

வெறுப்பின்பால் ஏற்பட்ட அரசியல் என்பது ஒருபோதும் இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இல்லை. ஒரு தனிநபரை சுற்றி மட்டுமே இந்திய அரசியலை மாற்ற முடியுமா? என அவர்கள் யோசிக்கிறார்கள். அந்த நோக்கத்திலேயே அவர்கள் சிதையுண்டுபோவார்கள். 
 

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெறும் வெற்றிகளாகட்டும், வாக்கு சதவீதம் உயர்ந்ததாகட்டும் அல்லது பாஜகவுக்கு அங்கு மக்கள் கொடுக்கக்கூடிய ஆதரவும், மம்தா பானர்ஜியை கலங்கடிக்கிறது. அவர் பாஜகவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டின் வாயிலாக தன்னுடைய ஆட்சியில் நடக்கின்ற அவலங்களை மறைக்கப் பார்க்கிறார். சட்டம் ஒழுங்கில் இருந்து ஆரம்பித்து மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக இருப்பதை மறைப்பதற்காக மற்ற தலைவர்களை அழைத்து அங்கு ஒரு நாடகத்தை நடத்தப்பார்க்கிறார்.
 

பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். மேலும் பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி வருகின்றன. பாஜகவின் கூட்டணி பலம் குறைகிறதா?
 

தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, ஸ்டாலின் அங்கு செல்கிறார். பாஜகவுக்கு எதிராக இன்று கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பவர்களுக்குள் என்ன குழப்பம் ஏற்படும் என்று தெரியாது. இன்று கூடிய தலைவர்கள் தேர்தல் வரை ஒன்றாக இருப்பார்களா என்பதும் தெரியாது. நம்பகத்தன்மை இல்லாத தலைவர்களெல்லாம் ஒன்றுகூடி ஒரு தனிநபருக்கு எதிராக, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கூட்டணி அமைப்பது என்பது இந்தியாவில் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
 

பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும்கூட மற்ற கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது. எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் எந்தக் காரணத்திற்காக வெளியே சென்றிருக்கிறார்கள் என்பதை அந்தந்த மாநில மக்கள் நன்கு அறிவார்கள். கூட்டணியின் எண்ணிக்கை மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை. 
 

22 தலைவர்கள் பங்கேற்றிருப்பதால் இந்தக் கூட்டம் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்களே?
 

பாஜகவுக்கு எதிரான ஒரு தாக்கத்திற்கு ஒரு முயற்சியை இவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 22 தலைவர்கள் இல்லை, 250 தலைவர்கள் ஒன்றுகூடி நின்றாலும் பிரதமர் மோடிக்கு இவர்கள் ஈடாகமாட்டார்கள். இந்த ஐந்து வருட காலத்தில் பிரதமர் செய்திருக்கின்ற ஒவ்வொரு தனித் தனி சாதனைகளையும் பட்டியலிட்டு நாங்கள் கொடுக்கிறோம். இதற்கு மாற்றாக என்னவெல்லாம் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில், அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் பட்டியலிடட்டும். இந்த மாதிரியான ஆரோக்கியமான போட்டிக்கு வந்தால் பாஜக அதற்கு தயாராக இருக்கும். ஆனால் இல்லாத கற்பனை கதைகளை கூறிக்கொண்டு மக்களை திசைத்திருப்ப பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.