Skip to main content

கஞ்சா கடத்திய மாணவர்கள்! சேஸ் செய்து பிடித்த தமிழக காவல்துறை!

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Tamilnadu police chased and caught youngsters in viluppuram

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய வேட்டை நடத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் தடை செய்யப்பட்ட சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் ஏட்டுகள் தயாள்ராஜ், கணபதி, ஆயுதப்படை காவலர் மோகன்குமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்த போது அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர். உடனே அவர்களை போலீசார் தங்களது இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். அவர்கள் இருவரும் கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே சென்ற போது போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி தலை மறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பின்னால் பையுடன் அமர்ந்து வந்த வாலிபரை போலீசார் பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரம் கீழ்செங்கல்மேட்டை சேர்ந்த ஜெயராமன் மகன் அஜய் (வயது 20) என்பதும், தப்பியோடியது அவரது நண்பர் லாலி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரது பையை சோதனை செய்தபோது அதில் 5 கிராம் அளவில் சிறு சிறு பொட்டலங்களாக 100 பொட்டலங்களும், மற்றொரு கவரில் 600 கிராம் கஞ்சா இலையும் தழையுமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ஒன்றரை லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

 

அதனைத் தொடர்ந்து அஜய்யிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், அவருடன் கஞ்சா புகைக்கும் போது நண்பரான லாலியும் சேர்ந்து புதுச்சேரிக்கு சென்று அங்கு அடையாளம் தெரியாத சிலரிடம் கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்திக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அஜய்யை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான லாலியை தேடி வருகின்றனர். 

 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் விஜயகுமார், கரிகால் பாரிசங்கர் ஆகியோர்  நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.