







மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது.
டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து எழாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், ஏர் கலப்பை பேரணி அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் அருகே நடைபெற்றது. மாவட்டத் தலைவர் க.வீரபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டார். போராட்டத்தின்போது நெல் மணிகளைக் கீழே கொட்டி, பிரதமர் மோடிக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், சாலைமறியல் செய்ய முயன்றவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதேபோல், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலிருந்து ஏர் கலப்பை பேரணி நடத்தினர்.