Skip to main content

ஆவின் அதிகாரிகளின் உத்தரவு; கேள்விக்குறியாகும் எளியோரின் வாழ்வாதாரம்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Stop selling local milk to tea shops

 

தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் ஆவின் மூலம் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் பாலாகவும், பல்வேறு உணவுப் பொருட்களாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைக்கு வருகிறது. அதனால் ஆவினுக்கு அதிக அளவு பால் தேவைப்படுவதால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டும் உள்ளூரில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளலாம். மீதமுள்ள 90% பாலை கூட்டுறவு சங்கங்கள் ஒப்பந்தப்படி ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று பால் வளத்துறை அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

இந்த நிலையில், பால்வளத்துறை சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக கடந்த 10-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 70% செய்து வந்த உள்ளூர் விற்பனையை நிறுத்தியது. இதனால் பொதுமக்கள், டீ கடைக்காரர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முதுநிலை ஆய்வாளர் திருப்பதி மற்றும் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் பால் விற்பனை செய்ய முடிவான பிறகு, உள்ளூர் விற்பனை தொடங்கியதுடன், ஆவினுக்கு பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இதுகுறித்து அமைச்சர் நாசர் நம்மிடம், “கூட்டுறவு சங்க முறைகேடுகளைத் தடுக்கவும், பிற ஊர்களுக்கு தேவையான பால் அனுப்பவுமே 10% உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப சொல்கிறோம்” என்றார். இந்த நிலையில், நேற்று திங்கள் கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பால்வளத்துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி உள்ளூர் விற்பனை 10% மட்டுமே பால் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், கீரமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 44% சதவீதம் உள்ளூர் விற்பனை செய்யப்படுவதால் ஆவினுக்கான பால் குறைகிறது. ஆகவே, கீரமங்கலம் பகுதியில் டீ கடைகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் விற்பனை நிறுத்தப்படுகிறது. அதனால் கூட்டுறவு சங்க பணியாளர்கள், பால் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் செயலாளர் கணேசன் மற்றும் பணியாளர்கள் கீரமங்கலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். டீ கடைகளுக்கு பசும்பால் விற்பனை நிறுத்தியுள்ளதால் செவ்வாய் கிழமை கீரமங்கலம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டீ கடைகள் மூடப்பட்டதுடன் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆவினுக்கு பால் ஏற்றிச் செல்லும் வாகனத்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பான சூழல் நிலவியது.

 

தகவலறிந்து வந்த கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த பிறகு, ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலனிடம் பேசினார். டீ கடைகளுக்கு பால் விற்பனையை நிறுத்த வேண்டாம் என்றும், தற்போது உற்பத்தி குறைவாக இருந்தாலும் விரைவில் உற்பத்தி அதிகரிக்கச் செய்து ஆவினுக்குத் தேவையான பாலை அனுப்புவதாகவும் கூறிய பிறகு டீ கடைகளுக்கு பால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறைபிடிக்கப்பட்ட பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இது குறித்து ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன் நம்மிடம் பேசுகையில், “கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடக்காமல் வரைமுறைப்படுத்தவும், ஆவின் மூலம் தரமான பால் வழங்கவும்தான் உள்ளூர் விற்பனையை நிறுத்தக் கூறியுள்ளோம். வீடுகளுக்குத் தேவையான பால் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடைகளுக்கு வழங்கும் பால் தரம் ஆய்வு செய்து வழங்க வேண்டியுள்ளது. அதனால்தான் ஆவினுக்கு ஏற்றி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்யும் பாலை ஆவினுக்கு அனுப்புவதாகத்தான் ஒப்பந்தம் செய்துள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

“தலைமை மருத்துவரிடம் பேசினோம்” - விஜயகாந்த் உடல் நலம் குறித்து நாசர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

nassar about vijayakath health condition

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்த்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது நாசர் பேசுகையில், “கேப்டன் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுது. கொஞ்ச நாளாக வெளியான செய்திகளெல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை பார்த்தோம். அவரும் நல்லாயிருப்பதாக சொன்னார். அதனால் மிகைப்படுத்தின செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்னால் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார்” என்றார்.