
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ள புஜரடி பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ராஜேந்திரன் (வயது 60). இவர் தீராத வயிற்று வலி காரணமாகக் கடந்த 2 தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
அதே சமயம் அங்கு வெங்கல் பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்தில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த ரஷீத கான் என்பவருடைய சடலம் வைக்கப்பட்டிருந்தது இந்நிலையில் ரஷீத் கான் சடலத்தைக் கொடுப்பதற்குப் பதிலாகக் கூலித் தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தைப் பீகாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி வெங்கல்லில் இருந்து முதியவர் சடலத்தைத் தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். அதன்படி பீகாருக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரது சடலத்தைக் கேட்டு ராஜேந்திரன் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ராஜேந்திரன் உறவினர்களைச் சமரசம் செய்தனர். அதோடு உடனடியாக மீண்டும் ராஜேந்திரன் சடலத்தைப் பீகாரில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட 2 இரண்டு பேரின் உடல்கள் மாறிய சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.