Skip to main content

மிரட்டும் மூன்றெழுத்துக் கட்சி; மிரளும் டோல்கேட் நிர்வாகம் - கண்டுகொள்ளாத காவல்துறை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Political party  members who intervene in the toll road issue

 

வேலூர் டூ திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நகரத்துக்கு அருகே இனாம்காரியந்தல் கிராம எல்லையில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது என சிபிஎம், சிபிஐ மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன.

 

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி மாலை 6 மணியவில் 4 சக்கர சரக்கு வாகனம் 20 ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது அந்த வாகனத்தின் பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் கேட் திறக்கவில்லையாம். பணியில் இருந்த தமிழ்செல்வன், தனுசு இருவரும், ‘வண்டியை ஓரம் கட்டுங்கள். உங்கள் பாஸ்டேக்கில் போதிய இருப்பு இல்லை, பணம் கட்டிவிட்டு செல்லுங்கள்’ எனச் சொல்லியுள்ளார்கள். வாகனத்தை டோல்கேட்டின் குறுக்காக நிறுத்திவிட்டு, ‘நீங்க பணம் அதிகமா எடுக்குறீங்க அதனால்தான் பணம் போச்சு’ எனத் தகராறு செய்துள்ளார் வாகன ஓட்டுநரான வட ஆண்டாப்பட்டைச் சேர்ந்த முருகன். இதுகுறித்து தமிழ்செல்வன், தனுசு இருவரும் தங்களது அடுத்த உயர்நிலை டோல்கேட் ஊழியரான ராம்சந்தரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்து, ‘எத்தனை முறை வண்டி டோல்கேட் போய் வந்துள்ளது. இப்போது அவரது பாஸ்டேக்கில் உள்ள பேலன்ஸ்’ குறித்து கூறி 15 ரூபாய் குறைவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

 

அப்போது அந்த வண்டியில் பயணம் செய்த சிவக்குமார் என்பவர், ‘15 ரூபாய்க்கு வக்கில்லாமலா இருக்கோம்? நீ கேட்கற பணம் தர்றோம்’ என்று சொல்லிவிட்டு அவர்களின் வீட்டுப் பெண்களை ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதமாகி இருதரப்புக்கும் கைகலப்பாகியுள்ளது. “இருடா என் ஆளுங்களோட வர்றன்..” என அங்கிருந்து சென்றுள்ளார் சிவக்குமார் என்பவர். அடுத்த ஒருமணி நேரத்தில் சிவக்குமார் தன்னுடன் பத்து பேரை அழைத்து வந்து டோல்கேட் அலுவலகம் முன்பு நின்றிருந்த ஊழியர் ராம்சந்தரை அடித்து உதைத்துள்ளனர். “இனிமே எங்க ஊர்க்காரங்க பெயரைக் கேட்டாலே பயப்படணும், காசே வாங்கக்கூடாது..” எனச் சொல்லியுள்ளனர். அடி வாங்கி பல் உடைந்த, கண்ணில் காயம் பட்ட டோல்கேட் ஊழியர் ராம்சந்தர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுக்கா காவல்நிலையத்தில், நடந்த சம்பவம் குறித்து சிசிடிவி பதிவுகளோடு டோல்கேட் மேலாளர் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். சி.எஸ்.ஆர் கூட போடவில்லையாம். நீங்க அடிச்சதா அவுங்களும் உங்க மேல புகார் தந்திருக்காங்க. வீணாக பிரச்சனை எதுக்கு. இரண்டு தரப்பும் காம்ப்ரமைஸ் செய்துக்கங்க எனச் சொல்லி பஞ்சாயத்து பேசியுள்ளார்கள் திருவண்ணாமலை தாலுக்கா போலீஸ் அதிகாரிகள்.

 

சம்பந்தப்பட்ட டோல்கேட் அலுவலகத்துக்கு வந்த ஒரு குறிப்பிட்ட மூன்று எழுத்துக் கட்சி நிர்வாகிகள் சிலர், ‘எங்க கட்சி நிகழ்ச்சிக்கு நன்கொடை வேணும்’ எனக் கேட்டுள்ளார்கள். அதெல்லாம் நாங்க முடிவு எடுக்க முடியாது. சென்னையில் உள்ள ஹெட் ஆபிஸ்தான் முடிவெடுக்கணும் எனச் சொல்லியுள்ளார்கள் அங்குள்ள ஊழியர்கள். முதல்முறை அமைதியாகச் சென்றவர்கள் இரண்டாவது முறையும் வந்து கேட்டுள்ளார்கள். அப்போது அங்குள்ள பணியாளர்கள் தங்களது மேலதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். அவர்கள் டோல்கேட் அலுவலகத்துக்கு வந்திருந்த சாதி சங்க பிரமுகர்களிடம், இப்போ செய்ய முடியாது இன்னும் இரண்டு வருடம் போகட்டும் தர்றோம் எனச் சொல்லியுள்ளார்கள். இரண்டு முறை அப்படி கேட்டும் நன்கொடை தரவில்லை என்கிற கோபத்தில், 3 மாதத்துக்கு முன்பு சுங்க கட்டணம் கட்டமாட்டோம் என அதே சாதிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் உறவினர்கள் எனச் சொல்லிக்கொண்டு சிலர் பிரச்சனை செய்தார்கள். இப்போதும் அந்த குறிப்பிட்ட சாதிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியின் தரப்பைச் சேர்ந்தவர்கள் தான் பிரச்சனை செய்து திட்டமிட்டே வந்து அடித்தார்கள். புகார் தந்த பின்பு, சமாதானமா போகலாம் வா என அடிபட்டவரை செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டுவதும் அதே பிரமுகர்கள் தான் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.  

 

அவர்கள் கூட்டாக வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரங்கள் இருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையாம். மாவட்ட உயர் அதிகாரிகள் சமாதானமா போங்க எனச் சொல்வது நியாயமா?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.