Skip to main content

'அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்'-பவதாரிணி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
'The place he leaves will remain the same'- Chief Minister condoles the death of Bhavadharini

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

'The place he leaves will remain the same'- Chief Minister condoles the death of Bhavadharini

பாடகி பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'பிரபல பின்னணி பாடகியும் இளையராஜாவின் அன்பு மகளுமான பவதாரிணி மறைவு வேதனை அளிக்கிறது. தேனினும் இனிய தனது குரல் வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம் பிடித்தவர் பவதாரிணி. கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் கொண்டவர் பவதாரிணி. அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றவர். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையில் எத்தனையோ சாதனைகளை செய்திருக்க வேண்டியவர். அவரது திடீர் மறைவு இசை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து தவிக்கும் இளையராஜா மற்றும் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.