Skip to main content

மாவட்ட ஆட்சியரின் காலங்கடந்த உத்தரவு; செய்வதறியாது நிற்கும் கிராம மக்கள்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

people shocked by the late order of the District Collector

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி நகரம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், புள்ளாண்விடுதி, பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு உள்பட ஆலங்குடிக்குக் கிழக்கே உள்ள அனைத்து கிராமங்களிலும், அதே போல பேராவூரணி தொகுதியில் பைங்கால், ஆவணம், திருச்சிற்றம்பலம், களத்தூர், குருவிக்கரம்பை உள்பட ஏராளமான கிராமங்களிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வருடத்திற்கு ஒரு முறை ஆடி மாதத்தில் மொய் விருந்துகள் நடத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் வாங்கிய மொய்ப் பணத்தைத் திரும்பச் செய்யும் முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

இதனால்  காய்கறி, மளிகை, விறகு, சமையல், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. மொய் விருந்துகள் செய்து விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்வது, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவணி மாதமும் மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக கஜா புயல் பாதிப்பு, கரோனா ஊரடங்கு காரணமாக ஆடி மாத மொய் விருந்துகள் நடத்தப்படாமல் நூற்றுக்கணக்கானோர் கடனில் தத்தளிக்கின்றனர். இந்நிலையில், இந்த வருடம் ஆடி மாதம் பிறந்த போது மொய் விருந்துகள் நடத்துவது பற்றி எந்த அறிவிப்பும் வராத சூழலில், தற்போது சிலர் மொய் விருந்து பத்திரிக்கைகள் அச்சடித்து ஊரெங்கும் கொடுத்துவிட்டு விருந்து நடத்தத் தயாராக உள்ளனர். இந்த சூழலில், நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மொய் விருந்துகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

 

people shocked by the late order of the District Collector

 

இந்த அறிவிப்பால் மொய் விருந்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் தயாராக இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து மாங்காடு கிராமத்தில் மொய் விருந்துக்காகத் தயாராகி திடீரென ஆட்சியர் அறிவிப்பால் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளவர்கள் கூறும் போது, “ஆடி மாதம் பிறந்த போதே மொய் விருந்துகள் நடத்தத் தடை என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தால் யாரும் அதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திடீரென அறிவித்திருப்பதால் சில நாட்களில் மொய் விருந்து நடத்த பத்திரிக்கை கொடுத்துவிட்டு லட்சக்கணக்கில் கடன் வாங்கி முன் ஏற்பாடுகளுக்காகச் செலவு செய்துள்ள நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாக தடை என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. மொய் விருந்து பத்திரிக்கைகளை வெளியில் கொடுத்துள்ளவர்களுக்கு அனுமதி அளித்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மொய் விருந்துகளை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிர்க்க விசாலமான சாப்பாடு மற்றும் மொய் பந்தல் அமைத்துள்ளனர். கிருமிநாசினி, மாஸ்க் வைக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இருப்பினும், வேறு வழி இல்லாததால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சிகளை ரத்து செய்கிறோம். ஆனால் மீண்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மொய் விருந்துகள் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.