
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள இளந்தோப்பு கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி மூக்கன் (70). இவரது மனைவி செல்லமணி (64). வயது முதிர்ந்த தம்பதிகளான இவர்களுக்கு ராஜா, சந்திரசேகர் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. இதில் மூத்தமகன் ராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் மனைவி, தன் இரண்டு பிள்ளைகளோடு வாழ்ந்துவருகிறார். அனைவருமே கூலி வேலை செய்பவர்கள்.
வயது முதிர்ந்தாலும், மூக்கனும் அவரது மனைவி செல்லமணியும் கூலி வேலைக்காக வெளியூர் சென்று, பத்து நாட்கள் கழித்து ஊர் திரும்புவது வாடிக்கையாம். முதியவருக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. அதன் பொருட்டு வீடு பாகப் பிரிவினை கேட்டு, அவரின் மூத்த மருமகள் விவகாரத்தைப் போலீஸ் வரை கொண்டு போயிருக்கிறார். அங்கே நடந்த விவகாரம் காரணமாக முதியவர் மனமுடைந்த நிலையில் இருந்திருக்கிறார். இந்தநிலையில், எப்பொழுதும்போல் வேலைக்காக கடந்த 20ஆம் தேதி முதிய தம்பதியரான மூக்கனும் அவர் மனைவியும் வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பவில்லையாம். அக்கம் பக்கத்தினரோ அவர்கள் வரத் தாமதமாகலாம் எனக் கருதியுள்ளனர்.
இந்த நிலையில், இளந்தோப்பின் காட்டுப் பகுதியில் மூக்கனும் அவர் மனைவியும் விஷமருந்தி இறந்து கிடப்பதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் இறந்துகிடக்கும் தகவல் கிடைத்ததும், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அது குறித்து வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
வயது முதிர்ந்த தம்பதியினர், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது நாங்குநேரிப் பகுதியில் பரபரப்பாகியுள்ளது.