உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வருமான வரித் துறை உதவி ஆணையர் பதவியை பெண் அதிகாரி ராஜினாமா செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன், கடந்த 10 ஆண்டுகளாக சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். ஆனால், தற்போது நடைபெறும் ஊராட்சி தேர்தலில் சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் பிரபாகரன் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாததால் தனது மனைவியை தலைவர் பதவிக்கு நிறுத்த முடிவெடுத்தார். ஆனால் இவரது மனைவி சாந்தகுமாரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பதவி வகித்து வந்தார்.
அரசு அலுவலர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்பதால் மாத ஊதியமாக சுமார் 2 லட்சம் ரூபாய் பெற்று வந்த பணியை உதறிவிட்டு, தனது கணவரின் விருப்பத்திற்காக நேற்று உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு சாந்தகுமாரி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.