Skip to main content

ஆகமங்களுக்கு முரண்... பூட்டிய ஆலயத்திற்குள்ளே யாகம்... பக்தர்கள் அதிர்ச்சி!!!

Published on 24/01/2019 | Edited on 25/01/2019

 

kutralam

 

நெல்லை மாவட்டத்தின், அருவிகளின் நகரமான குற்றாலத்திலிருக்கிறது குற்றாலநாதர் குழல்வாய் அம்மாள் சிவனாலயம். அருவிக்கரையோரம் அமைந்துள்ளது இந்த கோவில்.
 

ஆதிகாலத்தில் இந்த ஆலயம் சங்கு வடிவம் கொண்ட பெருமாள் ஆலயமாக இருந்தது. வடபுலம் தாழ்ந்து தென் புலம் உயர்ந்ததால் அதனை சமன் செய்யும் பொருட்டு சிவபெருமான் அகத்தியரை தென்பக்கம் அனுப்பி வைத்தார். தென் பொதிகை வந்த அகத்திய மாமுனி அருவியில் நீராடி விட்டு அருகில் உள்ள ஆலயத்தில் தரிசனத்திற்காகப் போயிருக்கிறார். சிவபக்தரான அகத்தியரை ஆலய வைணவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அகத்தியர் சற்று நேரத்திற்குப் பின்னர் பெருமாள் பக்தர் வேடத்தில் ஆலயம் சென்று கருவறையில் புகுந்து அங்குள்ள பெருமாள் நாம கரணத்தை அழித்து விட்டு அதனை சிவபெருமானாக மாற்ற, பின்பு அதைக்கண்டு வைணவர்கள் அதிர்ந்திருக்கிறார்கள். அதன் பின் சிவ ஆலயமாக மாறியிருக்கிறது. சிவ ஆலயமாக மாறும் அது, இயல்பாகவே பரிகார தலமாகவும் ஆகியிருக்கிறது. இதுதான் அந்த ஆலயத்தின் ஸ்தல புராணம்.
 

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென 6.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. ஆனால் ஆலயத்தில் இரவு 8.30 மணி வரை யாக பூஜை நடந்தது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியையும், சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது.
 

கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்ரீகுமார் தலைமையிலான நான்கு நம்பூதிரிகள் இந்த பூஜைகளை நடத்தியுள்ளனர். ஆலயத்தின் மகாசக்தி குறைவானதால் அதனை நிவர்த்தி செய்ய பூஜை நடத்தப்பட்டது என்றார் ஸ்ரீகுமார். ஆலயத்தின் உதவி ஆணையரான செல்வக்குமாரி, ராஜகோபுரத்தை சீரமைப்பதற்கான ஆரம்பகட்ட பரிகார பூஜைதான் அது என்கிறார்.
 

ஆனால் குற்றால ஆலயம் சில வருடங்களுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்படியிருக்கும்போது, உதவி ஆணையர் சொன்னது சாத்தியமில்லை என்கிறார்கள்.
 

எது எப்படி இருப்பினும் பரிகார பூஜையோ அல்லது யாகமோ, ஆலயம் அல்லது பிற இடத்தில் நடத்தப்பட்டால் அந்தப் பகுதிகளை பூட்டிக் கொண்டு நடத்தக்கூடாது. அது பூஜை புனஸ்காரங்களுக்கான ஆகம மரபுகளுக்கு முரணானது. அந்த யாகம் எந்த விதப் பலனையும் தராது என்கிறார்கள். தென்காசிப் பகுதியின் ஆலய மூத்த பட்டர்கள். இது யாக சீசன் வாரம் போல. பூட்டிய கோவிலுக்குள் பூஜை, ஆன்மீகத்திற்காகவா அல்லது அரசியல்வாதிகளுக்காகவா என்பது பற்றிய சர்ச்சை ஓயவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்