Skip to main content

திண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது! வாகனம் பறிமுதல்!!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

incident in dindigul

 

திண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சாவுடன் 7 பேரை போலீஸார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம், மெட்டு, வருஷநாடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதனைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கம்பம் வீரபாண்டி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 300 கிலோ கஞ்சாவுடன், கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கும்பலாக இயங்கி பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சா கடத்தி, வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

 

incident in dindigul


அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரியா அறிவுறுத்தலின் பேரில், தனிப்படை போலீசார் மாவட்ட எல்லைகளில் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே தங்கட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 200 கிலோ கஞ்சா விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

மேலும், திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சரக்கு வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக திண்டுக்கலைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சோண முத்து, பரணி, ஜெய்சங்கர், ராகவன், யுவராஜ், மற்றும் பாடியூர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆண்டியப்பன் ஆகியோரை கைது செய்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, விற்பனைக்காக எங்கு கொண்டு சென்றனர் என்பது  குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.