Skip to main content

அரசு பேருந்து ஓட்டையில் தவறிவிழ இருந்த குழந்தை! பேருந்தை இயக்க விடாமல் நிறுத்தி போராடிய பெண் பட்டதாரி!!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020

திண்டுக்கல் நந்தவனம்பட்டியைச் சேர்ந்தவர் உஷா. பொறியியல் பட்டதாரி பெண்ணான இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியில்  தங்களது தோட்டத்தில் விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

உஷா வழக்கம்போல் திண்டுக்கல்லில் இருந்து எழுவனம்பட்டி செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குமுளி செல்லும் ஒரு அரசு பேருந்தில் தனது குழந்தையுடன் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். பேருந்து சிறிது தூரம் கடந்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற தனது குழந்தை திடீரென தடுமாறி விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தனது குழந்தையின் இருக்கையின் அடியில் பெரிய ஓட்டையை மறைத்து ஒட்டுப் போட்டு வைத்திருந்த தகரம் கிழிந்து குழந்தையின் கால் உள்ளே சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 

incident in dindigul

 

உடனடியாக பேருந்து நிறுத்த சொல்லி ஓட்டையை அடைக்கும் வரை பேருந்தை இயக்க வேண்டாம் என வற்புறுத்தி உள்ளார். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் இதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை மாறாக உயரதிகாரியிடம் புகார் கொடுங்கள் என கூறியுள்ளனர். திண்டுக்கல் போக்குவரத்து மண்டல மேலாளர் புகழேந்தியிடம் தொலைபேசியில் புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே பேருந்து திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையம் வந்தடைந்தது. வத்தலகுண்டு போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தை சரிசெய்யாமல் உஷாவை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

incident in dindigul

 

உஷா ஓட்டையை அடைக்க பலமுறை வற்புறுத்தி வலியுறுத்தி உள்ளார். ஆனால் போக்குவரத்து துறை அதிகாரிகளோ அலட்சியம் காட்டியதால் ஆத்திரமடைந்த விவசாய பெண் பட்டதாரி உஷா, பேருந்து முன்பு நின்று கொண்டு பேருந்தை சரிசெய்யாமல் எடுக்க விட மாட்டேன் என கூறி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக வத்தலக்குண்டு நிலையத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து பணிமனை பேருந்து எடுத்து சென்று அங்கு பேருந்து ஓட்டைகளை முழுதுமாக  சரிசெய்தனர். பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து கிளம்பும் அனைத்து பேருந்துகளும் முறையாக பராமரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்பே பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவாதத்தை சுற்றறிக்கையாக அறிக்கையாக வெளிவரச் செய்த  பின்னர் தான் தனது குழந்தையுடன் ஊருக்கு திரும்பியுள்ளார் உஷா.

 

incident in dindigul

 

விவசாயப் பெண் பட்டதாரியின் இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்த கையோடு ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடும் அரசு போக்குவரத்து துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்