Skip to main content

திருச்சியைச் சேர்ந்தவர் குவைத்தில் உயிரிழப்பு; துரை வைகோ எம்.பி உதவியால் சென்னை வந்த உடல்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Duvakkudi Palanichami, who passed away in Kuwait, arrived in Chennai

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி துவாக்குடி நகராட்சி, பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ரமீலா என்பவரது கணவர் பழனிசாமி(39). குவைத் நாட்டில் ஜூன் 5-ஆம் தேதி இரவு உயிரிழந்தார். மறைந்த பழனிசாமி அவர்களது மனைவி ரமீலா மறுமலர்ச்சி திமுக மகளிர் அணியில் பணியாற்றுகின்றார். ஆகவே, பழனிசாமி உடலை விரைந்து திருச்சி கொண்டு வரவேண்டும் என்பதற்காக துவாக்குடி நகரச்செயலாளர் மோகன் பெரியகருப்பன், மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மூலம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் உடனடியாக தொலைபேசி வழியாக ரமீலாவிடம் தமது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். இதன்பின்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாருக்கும், சென்னையில் உள்ள குவைத் துணைத் தூதரகத்திற்கும் பேசிய பழனிச்சாமி  உடலை சொந்த ஊருக்கு அனுப்பிட முயற்சி மேற்கொண்டார். இதனிடையே அயலகத்தில் உள்ள மதிமுக இணையதளத்தைச் சேர்ந்த மினர்வா ராஜேஷ், பிரசாத் அவர்களையும் தொடர்பு கொண்டு, பழனிசாமி அவர்கள் பணியாற்றிய உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் இருந்து போதிய சான்றிதழ்கள் பெற்றுத்தர உதவிட வலியுறுத்தினார்.

குவைத் நாட்டில் இதுபோன்ற சமூக நல உதவிகளை தாமாக முன்வந்து செய்திடும் சமூக ஆர்வலர் மதி மற்றும் பொறியாளர் கருணாநிதி ஆகியோரின் பங்களிப்பையும் அறிந்து, இருவரையும் எம்.பி. துரை வைகோ தொலைபேசி வழியாகப் பாராட்டினார். இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த பழனிசாமி உடலை போதிய ஆவணங்களைப் பெற்றுத் தந்து, ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடிக்கு கொண்டு செல்வதற்கு உதவிடுமாறு, விமான நிலைய அலுவலர்களில் ஒருவரான கஜேந்திரனை எம்.பி. துரை வைகோ கேட்டுக் கொண்டார்.

மேலும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களுடன், ரமீலா குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து பழனிசாமி உடலைப் பெற்றுக் கொள்ள பணித்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு பழனிசாமி உடல், அவரது மகன் பிரவீன், அண்ணன் மகன்கள் செல்வகுமார், மணி, மைத்துனர் வினோத்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமான நிலையத்தில் மறைந்த பழனிசாமி உடலுக்கு மறுமலர்ச்சி திமுக  செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சைதை சுப்ரமணி, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், துவாக்குடி நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மோகன் பெரியகருப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து தென்சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹரி, மாநிலப் பொறியாளர் அணிச் செயலாளர் ஹேமநாதன், பல்லாவரம் வடக்கு பகுதிச் செயலாளர் வீராக்குமார், பல்லாவரம் தெற்கு பகுதிச் செயலாளர் எஸ்.மார்ட்டின், பம்மல் தெற்கு பகுதிச் செயலாளர் பிரவீன், பம்மல் வடக்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், சேகர், கே.எஸ்.பிரசாத் ஆகியோர் அவரது உடலுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

ஜூன் 5-ஆம் தேதி மறைந்த பழனிசாமி உடல், திருச்சி எம்.பி. துரை வைகோவின் பெரும் முயற்சியால்தான் 8-ஆம் தேதி மதியம் சென்னைக்குக் கொண்டுவர முடிந்தது. இதைக் கண்டு பழனிசாமி குடும்பத்தினர்  கண்ணீர் மல்க நெகிழ்ந்தனர். இன்று இரவு துவாக்குடிக்கு வருகை தரும் திருச்சி எம்.பி. துரை வைகோ, மறைந்த  பழனிசாமி  குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

சார்ந்த செய்திகள்