கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று (06/02/2020) மாலை தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தினார். அந்த ஆட்டோவில் 12 பேர் பயணித்த நிலையில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருப்பதாகக் கூறி ஆட்டோ ஓட்டுனரிடமும், பயணிகளிடமும் வாக்குவாதம் செய்தார். அதையடுத்து ஆட்டோவில் பயணித்தவர்கள் அதிலிருந்து இறங்கினர். ஆனாலும் அந்த ஆட்டோவில் கூடுதல் பயணிகள் அமர்வதற்காக, விதியை மீறி அமைக்கப்பட்டிருந்த பலகையிலான இருக்கையை அகற்ற வேண்டும் என வலியிறுத்தவே ஆட்டோ ஓட்டுனர் அந்த பலகை இருக்கையை அகற்றினார்.

இதற்கிடையே இதுபற்றி தகவலறிந்த புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் அங்கு வந்து விதி மீறிய ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறும்போது, “ஆபே என்றழைக்கப்படும் ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக பயன்படுத்த கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றுள்ளேன். நாகப்பட்டினத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் கடலூரில் ஆபே ஆட்டோவில் அதிகமானோர் பயணம் செய்வதை பார்த்தவுடன் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டேன். இது தொடர்பாக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் அளிப்பதுடன் உயர்நீதிமன்றத்திலும் புகார் தெரிவிப்பேன்” என்றார்.