புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் சிலையின் காலடியில் நண்பகல் உச்சி வெயிலில் தன் குழந்தையுடன் அரசு பேருந்து நடத்துனர் வீரமணிகண்டன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
ஏன் இந்த தர்ணா..?
அரசு போக்குவரத்து கழகத்தில் புதுக்கோட்டை கிளையில் நடத்துனராக இருந்தேன். அண்ணா தொழிற்சங்க நிர்வாகியும் அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் ஓட்டுநருமான ஜெபஸ்தியானுக்கும் எனக்கும் தொழிற்சங்கம் சம்மந்தமாக கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.10 திருடியதாக காரணம் காட்டி மெமோ கொடுத்து அறந்தாங்கி கிளைக்கு மாற்றினார்கள்.
அந்த பேருந்தும் புதுக்கோட்டையில் தான் மாற்ற வேண்டும் அப்படி மாற்ற செல்லும் போதும் ஜெபஸ்தியான் பிரச்சனை செய்கிறார். மறுபடியும் என்னை பழிவாங்க நிர்வாகம் ரூ.20 திருடியதாக மெமோ கொடுத்துள்ளனர்.
நான் திருடவில்லை என்பதை நிரூபிக்க எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தும் வாய்ப்பு கொடுக்கவில்லை. எனக்கு என்னை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வாய்ப்பு தரவேண்டும் அடுத்து அமைச்சரின் ஓட்டுநர் எனக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.