Skip to main content

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Chief Minister MKStalin letter to MPs and MLAs

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோன்று அன்றையதினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளனர். இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் தன்னால் 18.12.2023 அன்று தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்மூலம் மொத்தம் 8.74 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்திடத் திட்டமிட்டு வருகிற 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் தான் அதனைத் தொடங்கி வைக்க உள்ளேன்., அன்றையதினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். 

Chief Minister MKStalin letter to MPs and MLAs

மக்களின் தேவைகளை நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் 11.07.2024 அன்று நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்திட வேண்டும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 14 லட்சத்து 40 ஆயிரத்து 351 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

அதேபோன்று, பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளது. அதோடு சத்தான உணவினை வழங்குவதன் காரணமாகப் பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதைக் கண்டு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாகத் திட்டக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

Chief Minister MKStalin letter to MPs and MLAs

இந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும் கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம் என்ற தமது அரசின் உன்னத நோக்கத்தை எய்திடும் வகையில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையொட்டி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், தான் அதனைத் தொடங்கி வைக்க உள்ளேன். அன்றையதினம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 11-7-2024 அன்று விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும் மேலும் 15-7-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ள இந்த திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்நிகழ்வுகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் ஆதரவினை வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்” - தமிழக முதல்வர்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Chief Minister of Tamil Nadu Mk stalin condolences amstrong incident

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று (06-07-24) அவரதுவீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வந்தனர். மேலும், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கூறியதாவது, “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.  ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

பிரிட்டன் எம்.பி.யாக உமா குமரன் தேர்வு; முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Uma Kumaran elected as British MP Greetings from CM MK Stalin

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்குப் பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.

இதனையடுத்து பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்தது. இதன் மூலம் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த அறிவிப்பில் பிரதமராகப் பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றுக் கொண்டார். அதே சமயம் இந்த் தேர்தலில் தமிழ் பெண்ணான உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

Uma Kumaran elected as British MP Greetings from CM MK Stalin

இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உமா குமரன் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.